
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் 1907-ல் இவர் தோன்றினார். தந்தையார் ந. காசிநாத பிள்ளை, தாயார் முத்தம்மாள். நாகர்கோவில் ஸ்காட் கிறித்துவக் கல்லுாரி, திருவனந்தபுரம் மகாராஜா கலைக் கல்லுாரி ஆகியவற்றில்
பயின்று ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார். தமிழ் எம்.ஏ., இந்தி விசாரத், எல்.டி. ஆகிய பட்டங்களும் பெற்றார். சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, பச்சையப்பன் கல்லுாரி, திருநெல்வேலி இந்துக் கல்லுாரி ஆகியவற்றில் ஆசிரியராகவும், 'திராவிடன்', 'ஜஸ்டீஸ்', 'லிபரேட்டர்', 'விடுதலை', 'குமரன்', முதலிய பல செய்தி இதழ்களின் ஆசிரியராகவும் தொண்டாற்றியுள்ளார்.
பொதுவுடைமை இயக்கத் தலைவர் ப. ஜஂவானந்தம் அப்பாதுரையாரின் பள்ளித் தோழர். "கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் என் விளையாட்டுத் தோழர். பாரதிதாசன் கஷ்டப்பட்ட நேரங்களில் எல்லாம் உதவிய நண்பர், மற்றும் பெரியார், அண்ணா, மறைமலையடிகள், திரு.வி.க. இவர்களோடெல்லாம் பழகி இருக்கிறேன்" என்று அப்பாதுரையார் ஒரு பேட்டியின்போது தெரிவித்தார்.
அப்பாதுரையாரிடம் பயின்ற பெரும்புள்ளிகளில் சிலர்: கண்ணதாசன், முருகு. சுப்பிரமணியன், நாரா. நாச்சியப்பன், தெசிணி முதலியோர்.
திருநெல்வேலி, எம்.டி.டி. இந்துக் கல்லுாரிப் பள்ளியில் 1937 முதல் 1939 வரை இந்தி ஆசிரியனாக பணியாற்றினார். அக்காலங்களில் அப்பாதுரையார் காங்கிரஸ் பேரியக்கத்தில் நம்பிக்கையுடன் செயல்பட்டார். 1941-ஆம் ஆண்டு செட்டிநாடு அமராவதி புதுாரில் உள்ள குருகுலபள்ளியில் 6 மாதம் தலைமையாசிரியராக இருந்தார். இக்காலத்திற்கு முன்பே முதல் மனைவி நாச்சியாரை திருநெல்வேலியில் இழந்தார்.
1942-ஆம் ஆண்டு அலமேலு அப்பாதுரையை கலப்பு மணம் செய்து கொண்டார். இத் திருமணம் திருச்சி 'திராவிடர் கழகத்' தலைவர் தெ.பொ. வேதாசலம் தலைமையில், திருக்குறள் முனுசாமி முன்னிலையில் நடந்தது. 1947-முதல் 1949-வரை மைய அரசின் 'செய்தித் தொடர்பு துறை'யில் (றிதீறீவீநீ மிஸீயீஷீக்ஷீனீணீவீஷீஸீ ஙிக்ஷீமீணீ) பணியாற்றினார். இக்காலத்தில் மிஸீபீவீணீ‘ லிணீஸீரீணீரீமீ றிக்ஷீஷீதீறீமீனீ (இந்தியாவில் மொழிச் சிக்கல்) என்ற நுாலை, மறைமலையடிகளின் 40 பக்க முன்னுரையோடு வெளியிட்டார். இதனால் இவர் வேலை பறிபோயிற்று. 1949-59 வரை வேலையில்லாமல் இருந்த காலங்களில் பல நுாற்களை எழுதி வெளியிட்டார்.
1959-65 வரை, அறிஞர் அண்ணாவின் உதவியினால் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத் தமிழ் அகராதித் துறையில் டாக்டர் ஏ.சி. செட்டியாருடன் இணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1961-ஆம் ஆண்டு 'எழுத்தாளர் சங்க'த் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1965-ஆம் ஆண்டு முதல் 1971 வரை 'முப்பால் ஒளி' என்ற மாத இதழை தொடங்கி திருக்குறளுக்கான உரையை வெளியிட்டு வந்தார். 20 அதிகாரங்களுக்கு 1000 பக்கம் எழுதினார். பின்னர் இது 'திருக்குறள் மணி விளக்க உரை' என்ற பெயரில் ஆறு தொகுதிகளாக வெளி வந்தது.
வாழ்க்கை முழுவதும் எழுத்து, பேச்சு என்றே வாழ்ந்தவர். அவர் எந்த கொள்கைக்காக நின்றாரோ அந்த கொள்கையைக் கடைசி வரை விடாமல் காப்பாற்றினார். முதலில் காங்கிரஸ் கொள்கைகளுக்காகவும், பின்னர் திராவிடர் கழகக் கொள்கைகளுக்காகவும் இறுதிவரை வாழ்ந்து மடிந்தார். தம் காலத்தில் வாழ்ந்த எல்லா அறிவாளிகளுடன் அவருக்குத் தொடர்பு இருந்தது. பல கூட்டங்களுக்கும், மாநாடுகளுக்கும் தலைமை வகித்துள்ளார். பெயர் போடாமலே கிட்டத்தட்ட 40 புத்தகங்கள் வரை எழுதி கொடுத்திருக்கிறார்.
எந்த திராவிட இயக்கத்திற்குத் துாண் போன்று இருந்து கருத்துக்களை வழங்கி வந்தாரோ அந்த திராவிட இயக்கம் ஆட்சிக் கட்டிலில் ஏறிய பின்னர் குப்பையில் வீசிய மாணிக்கங்களில் ஒருவர் அப்பாதுரையார். தமிழ், மலையாளம், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் முதலிய மொழிகளில் நுட்பமான திறமை படைத்திருக்கிறார்.
தமிழுக்கு தொண்டாற்றிய அப்பாதுரையார் எழுதிய நுாற்களின் எண்ணிக்கை 300 க்கு மேல் இருக்கும். இன்று நமக்கு கிடைப்பதோ குறைவுதான்.
இந்தி ஆசிரியர் - இந்தியை எதிர்த்து போராடிய விந்தை நிகழ்ச்சியைத் தமிழகம் கண்டது. அவர் எந்த மொழி வெறி ஆதிக்கத்திற்கும் எதிராக இருந்தவர் என்பதை அவர் வாழ்வு காட்டுகிறது. தமிழர்களுக்காக சிந்தித்து வந்த அவர் மூளை 20-5-1989 அன்று தம் சிந்தனையை நிறுத்திக் கொண்டது.
எப்பாத் துறைக்கும்
இவனோர் பழம் புலவன்
அப்பாத் துரையறிஞன்
ஆழ்ந்தகன்ற - முப்பால்பா
நுாலறிவு ! நுாறு புலவர்கள்
சேரினிவன்
காலறிவு காணார் கனிந்து
-என்று பாவேந்தர் புகழ்வது உண்மை !