"துரும்பென மெலிந்த தேகம், துலங்கிடும்
குளிர்ந்த பார்வை இரும்பினும் வலி
உள்ளம்,இனியவை செய்யும் எண்ணும்,
பரம்பொருள் நினைவே காட்டும் பாரெலாம்
பரந்த நோக்கம், கரும்பினும் இனிய சொற்கள்
கவிமணி வடிவமாகும்."
என்று கவிமணியை படம் பிடித்துக் காட்டுகிறார் தேசிய கவிராமலிங்கனார். கவிமணி 1876-ஆம் ஆண்டு சுசீந்திரத்துக்கு ஒரு கல் வடக்கேயுள்ள 'தேரூர்' என்னும் சிற்றுாரில் பிறந்தார். தாய், தந்தையர்: ஆதிலட்சுமி, சிவதாணுப் பிள்ளை ஆவர். உள்ளூரிலே பள்ளிக் கல்வியையும், திருவனந்தபுரத்தில் மேல் படிப்பையும் முடித்தார். அக்காலத்தில் குமரி மாவட்டம் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்ததால் மலையாளமே பயின்றார். பின்னர், தேரூருக்கு அருகில் உள்ள வாணன்திட்டு என்ற இடத்தில் இருந்த திருவாடுதுறை ஆதினத்தைச் சேர்ந்த சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் பயின்றார். இளம் வயதினிலேயே 'அழகம்மை ஆசிரிய விருத்தம்' என்ற சிறு நுாலை பாடினார்.
புத்தேரி உமையம்மையாரை 1901-ல் திருமணம் புரிந்தார்.
ஆசிரியர் பணி: 1901-ல் கோட்டாற்றிலே தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்தார். பிறகு, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும், திருவனந்தபுரம் பெண்கள் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியிலும் ஆசிரியராகப் பணி புரிந்தார். பின்னர் திருவனந்தபுரம் அரசர் பெண்கள் கல்லுாரியில் தமிழ் விரிவுரையாளராகவும் பணியாற்றி 1931-ல் ஓய்வெடுத்துக் கொண்டார்.
ஆசிரியர் தொழிலில் இருந்து கொண்டே கவிதைகளை பல இதழ்களுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய புனைப் பெயர்கள்: ஆண்டான் கவிராயர், ஐயம்பிள்ளை, தே.வி, குயில், யதார்த்தவாதி என்பவைகளாம். இவருடைய படைப்புகளைத் தாங்கி வந்த இதழ்கள்: 'தமிழன்', 'கேரளா சொசைட்டி' 'திராவிடன்', 'செந்தமிழ்', 'கலைமகள்', முதலியவை. கவிமணியின் நண்பர் குழாம்: வையாபுரிப் பிள்ளை, இசையரசு இலக்குமணப் பிள்ளை, பேராசிரியர் கே,என். சிவராஜ பிள்ளை, பண்டித முத்துச்சாமி, கே.ஜி. சேசையர், டி.கே.சி. இராஜாஜி முதலியவர்கள் ஆவர். 1941-ஆம் ஆண்டு சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் ஏழாவது ஆண்டு விழாவிலே தே.வி.க்கு 'கவிமணி' பட்டம் கிடைத்தது. 1943-ஆம் ஆண்டு செட்டிநாட்டு அரசர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.
குழந்தை இலக்கியத்தின் முன்னோடியாக கவிமணி விளங்கினார். அவர் எழுதிய 'மலரும் மாலையும்' என்னும் நுாலை "செந்தமிழ் நாட்டு சிறுவர் சிறுமியர்க்-கிந்த நுால் உரியதாய் என்றும் வாழ்கவே" என்று உரிமையாக்கியதிலிருந்து உணரமுடியும். கவிமணி எழுதிய "தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு" என்ற பாடலை குழந்தைகள் என்றுமே மறக்க முடியாது. மழலை மொழி, இயற்கை இன்பம், காட்சி இன்பம், கதைப் பாட்டு, பஞ்சாமிர்தம் போன்றவை என்றும் இனிக்கக் கூடியவை.
கவிதைக்கு அடுத்து, தனக்கு பிடித்த துறை வரலாறே என்று அவரே எழுதியிருக்கிறார், இத்துறையில் கவிமணி எழுதியுள்ளவை: சாசனம் ஆராய்ச்சி, தெலுங்கு நாட்டுச் சாசனம்; புலைப்பேடி சாசனங்களும், விநோத வியாக்கியானங்களும், உலக முழுதுடையாள் சாசனம், பராந்திக பாண்டியன் சாசனம். இவை தவிர 1936-ஆம் ஆண்டு 'காந்தளூர்ச் சாலை' என்ற ஒப்பற்ற வரலாற்று ஆய்வு நுாலை வெளியிட்டார். இது தவிர அழகிய பாண்டியபுரத்தில் இருந்த பெரிய வீட்டு முதலியாரின் ஓலைகளை துய்ந்து 'ஜிக்ஷீணீஸ்ணீஸீரீஷீக்ஷீமீ கீலீவீமீ றிணீஜீமீக்ஷீ' என்ற தலைப்பில் வெளியிட்டார். மலையாளிகள் குமரி மாவட்டத்தை கேரளாவுடன் இணைக்க வேண்டும் என்ற பொழுது அதை மறுத்து குமரி மாவட்டம் பாரம்பரியமாக தமிழகத்துடன் எவ்விதத்தில் இணைந்திருந்தது என்பதை வரலாற்று ஆய்வுகளுடன் 1950-ல் கன்னியாகுமரியில், 'தென்குமரி எல்லை மாநாட்டு' தலைமையுரையில் விளக்கியுள்ளார்.
இசைக்காக அவர் செய்த தொண்டே 'தேவியின் கீர்த்தனங்கள்' என்ற நுால். அவர் பாடல்களில் சிறப்பானவை:
'கோயில் முழுதும் கண்டேன்'
'பாட்டுக்கொரு புலவன் பாரதியடா'
'நல்ல சகுனம் நோக்கிச் செல்லடி'
'சொன்னதெள்ளாம் மறந்தாரோ'
'வெய்யிற் கேற்ற நிழலுண்டு' - போன்றவை.
பல கெளரவ பொறுப்புகள் தந்தும்கூட கவிமணி மறுத்துவிட்டார். அவர் எளிமையின் மனிதர்; புகழ் விரும்பாதவர். அவர் விரும்பாவிட்டாலும் மக்கள் விரும்பி, அவருக்கு விழா எடுத்து, மலர் வெளியிட்டனர். 1954-ஆம் ஆண்டு செப்டம்பர் 26- ஆம் நாள் தனது ஊனுடலை நீத்து புகழுடம்பை எய்தினார்.
கவிமணி சமயோஜிதமாகவும் பல கவிதைகள் பாடியிருக்கிறார். சுசீந்திரம் ஆறுமுகம் பிள்ளையவர்கள் தசாவதானம் (பதின் கவனகம்) நடைபெற்றது. அந்நிகழ்ச்சியின் தலைவராக இருந்த கே.ஜி. சேஷையர், தசாவதானத்தை வியந்து 'பேஷ் பேஷ்' என்று பாராட்டினாராம். உடனே கவிமணி அந்நிகழ்வை,
"ஆறுமுகம் பிள்ளை அவதானம் கண்டெளியேன்
வேறு முகமன் கூற வேண்டுமோ? - தேறுமதி
சேஷையா மெச்சித் திருவாய் மலர்ந்து, சபாஷ்!
பேஷையா!' என்ற பிறகு!"
என்று பாடி தம் கருத்தைத் தெரிவித்தார்.