புகழ்பெற்ற துறை : கவிஞர்
தோற்றம் : 11-12-1882
மறைவு : 11-09-1921
சாதாரண மக்களும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய எழுச்சியூட்டும் பாடல்களைப் பாடி, விடுதலை உணர்வை மக்களுக்கு ஊட்டி, அவர்கள் உள்ளுணர்வைத் தட்டி எழுப்பியவர் மகாகவி பாரதியார். இந்திய தாய் நாட்டைக் காக்கும் பணியைவிட வேறு எந்தப் பணியிலும் நாட்டம் காட்டாமல் மிகுந்த ஆர்வத்துடன் தன்னை விடுதலைப் போரில் இணைத்துக் கொண்டவர்.
நாமிருக்கும் நாடுநம தென்பதறிந்தோம். இது
நமக்கே உரிமையாம் என இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்
என்ற மகாகவியின் பாடல் அவரது நாட்டுப் பற்றினை உணர்த்துவதோடு அவரது தன்மான உணர்ச்சிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
சென்னையில் சுதேசமித்திரன் நாளிதழின் துணையாசிரியராகப் பணியாற்றுகையில் தம் எழுத்தின் வாயிலாக மக்களுக்கு எழுச்சியையும் விழிப்புணர்வையும் ஊட்டியவர் விடுதலைப் போருக்காக 34 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவித்தவர். தமிழ் மொழி ம¦தும், தமிழ்நாட்டின் ம¦தும் அளவில்லாப் பற்று கொண்டவர்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவ தெங்கும் காணோம்
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே
போன்ற தனது கவிதைகள் மூலம் மக்கள் உள்ளத்திலே என்றென்றும் நிலைத்து நிற்பவர். மகாகவி பாரதியாரின் நினைவினைப் போற்றும் வகையில் எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.