| அவ்வையார் என்ற பெயரில் தமிழகத்தில் பலபுலவர்கள் இருந்துள்ளனர் என்பது வெளிப்படை. சங்ககால ஒளவையார் அதியமானுக்கு நல்ல நண்பர். நீண்டநாள் வாழ்வைத் தரும் நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஒளவையார் நீண்டநாள் வாழவேண்டும் எனக் கருதி அவருக்குக் கொடுத்தான் அதியமான் என்பது வரலாற்றுக்கதை சங்க இலக்கியத்தில் 59 பாடல்களைப்பாடியுள்ளார்.
பக்திக்கால இறுதியில் விநாயகர் அகவலைப் பாடிய அவ்வையார் ஒருவர். விநாயகரை வழிபடுபவர்கள் விநாயகர் அகவலைத்தான் முதல் நூலாகக் கொள்வர். மிகுந்த பக்திச் சுவையுடைய நூல். ஆழ்ந்தபொருளுடையது. அதற்குப் பலர் பல விளக்கங்கள் எழுதியுள்ளனர்.
அடுத்த ஒளவையார், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர். சங்ககால அவ்வையார் அரசர்களோடு பழகி வாழ்ந்தவர். இரண்டாம் அவ்வையார் பக்தர்களோடு வாழ்ந்தவர். மூன்றாம் ஒளவையார் குழந்தைகளோடு வாழ்ந்தவர். குழந்தைகளுக்காக நீதி நூல்களை எழுதியவர். சிறுவயதில் மனப்பாடம் செய்து கொண்டு, வயதான பின்பு பொருளைத் தெளிவாக உணரும் நிலையில் அமைந்த பாடல்கள்.
நான்காவது அவ்வையார் தனிப்பாடல்கள் மிகுதியாகப் பாடியவர். முருகன் குழந்தைநிலையில் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று அவ்வைப்பாட்டியிடம் கேட்க, அவன் மரத்தை உலுப்ப, பழங்கள் மண்ணில் விழ, பழத்திலுள்ள மண்ணை நீக்க ஒளவை ஊத, 'பழம் சுடுகிறதா? பாட்டி, என்ற கதையுடன் தொடர்புடைய ஒளவையார் மிகச் சிறந்த கருத்துள்ள தனிப்பாடல்களைப் பாடியுள்ளார்.
|