New Register   -  Login     
Tamil Mozhi - Literatures
 - தமிழ்மொழி முகப்பு » இலக்கியங்கள் » கவிதைகள் » பாரதிதாசன் கவிதைகள் »
சேனல்கள்
இணைப்புகள்

குடும்ப விளக்கு(kudumpavilakku)

 
[1] [2] [3] [4] [5] [6] [7] [8]
 
 
முதற் பகுதி

ஒருநாள் நிகழ்ச்சி
அகவல்

காலை மலர்ந்தது

இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை,
இரவு போர்த்த இருள் நீங்கவில்லை.
ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல்,
நள்ளிரவு மெதுவாய் நடந்துகொண் டிருந்தது.
தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த
கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது.
புலர்ந்திடப் போகும் பொழுது, கட்டிலில்
மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள்.

அவள் எழுந்தாள்

தூக்கத் தோடு தூங்கி யிருந்த
ஊக்கமும் சுறுசுறுப் புள்ளமும், மங்கை
எழுந்ததும் எழுந்தன இருகை வீசி;
தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி
குளத்து நீரில் குதிக்கும் கெண்டைமீன்!

கோலமிட்டாள்

சின்ன மூக்குத் திருகொடு தொங்கும்
பொன்னாற் செய்த பொடிமுத் தைப்போல்
துளிஒளி விளக்கின் தூண்டு கோலைச்
செங்காந் தள்நிகர் மங்கை விரலால்
பெரிது செய்து விரிமலர்க் கையில்
ஏந்தி, அன்னம் வாய்ந்த நடையொடு,
முல்லை அரும்பு முத்தாய்ப் பிறக்கும்,
கொல்லை யடைந்து குளிர்புதுப் புனலை
மொண்டாள்; மொண்டு, முகத்தைத் துலக்கி
உண்டநீர் முத்தாய் உதிர்த்துப் பின்னும்
சேந்துநீர் செங்கை ஏந்தித் தெருக்கதவு
சார்ந்ததாழ் திறந்து, தகடுபோற் குறடு
கூட்டி, மெருகு தீட்டிக் கழுவி,
அரிசிமாக் கோலம் அமைத்தனள்; அவளுக்குப்
பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி!

காலைப் பாட்டு

இல்லத்தினிலே எகினாள்; ஏகி
யாழின் உறையினை எடுத்தாள்; இசையில்
'வாழிய வையம் வாழிய' என்று
பாவலர் தமிழிற் பழச்சுவை சேர்த்தாள்.
தீங்கிலாத் தமிழில் தேனிசைக் கலவைபோய்த்
தூங்கிய பிள்ளைகள், தூங்கிய கணவனின்
காதின் வழியே கருத்தில் கலக்கவே,
மாதின் எதிர்அவர் வந்துட் கார்ந்தனர்.
அமைதி தழுவிய இளம் பகல்,
கமழக் கமழத் தமிழிசை பாடினாள்.

வீட்டு வேலைகள்

பறந்தனள் பச்சைப் பசுங்கிளி; மாடு
கறந்தனள்; வீட்டை நிறம் புரிந்தனள்;
செம்பு தவளை செழும்பொன் ஆக்கினாள்;
பைம்புனல் தேக்கினாள், பற்ற வைத்த
அடுப்பினில் விளைத்த அப் பம் அடுக்கிக்
குடிக்க இனிய கொத்து மல்லிநீர்
இறக்கிப் பாலொடு சர்க்கரை இட்டு
நிறக்க அன்பு நிறையப் பிசைந்த
முத்தான வாயால் முழுநிலா முகத்தாள்
"அத்தான்" என்றனள்; அழகியோன் வந்தான்.

கணவனுக்கு உதவி

வந்த கணவன் மகிழும் வண்ணம்
குளிர்புனல் காட்டிக் குளிக்கச் சொல்லி,
துளிதேன் சூழும் களிவண்டு போல
அன்பனின் அழகிய பொன்னுடல் சூழ்ந்து,
மின்னிடை துவள, முன்னின் றுதவி,
வெள்ளுடை விரித்து மேனி துடைத்தபின்,

குழந்தைகட்குத் தொண்டு

" பிள்ளைகாள்" என்றனள்! கிள்ளைகள் வந்தனர்!
தூய பசும்பொன் துளிகளைப் போன்ற
சீயக் காய்த்தூள் செங்கையால் அள்ளிச்
சிட்டுக் காட்டியும் சிறுகதை சொல்லியும்
தொட்டுத் தேய்த்துத் துளிருடல் நலங்காது
நின்ற திருக்கோலப் பொன்னின் சிலைகட்கு
நன்னீ ராட்டி நலஞ்செய்த பின்னர்
பூவிதழ் மேற்பனி தூவிய துளிபோல்
ஓவியக் குழந்தைகள் உடலில்நீர்த் துளிகளைத்
துடைத்து நெஞ்சில் சுரக்கும் அன்பை
அடங்கா தவளாய் அழகுமுத் தளித்தே,
"பறப்பீர் பச்சைப் புறாக்களே"என, அவர்
அறைக்குள் ஆடைபூண் டம்பலத் தாடினார்.

காலையுணவு

அடுக்களைத் தந்தி அனுப்பினாள் மங்கை;
"வந்தேன் என்று மணாளன் வந்தான்;
"வந்தோம் என்று வந்தனர் பிள்ளைகள்.
பந்தியில் அனைவரும் குந்தினர் வரிசையாய்.
தழைத்த வாழைத் தளிரிலை தன்னில்
பழத்தொடு படைத்த பண்டம் உண்டனர்;
காய்ச்சிய நறுநீர் கனிவாய்ப் பருகினர்.

தய்தான் வாத்திச்சி

நேரம் போவது நினையா திருக்கையில்
பாய்ச்சிய செங்கதிர் பட்டது சுவர்மேல்;
அவள்கண்டு, காலை "ஆறுமணி" என
உரைத்தாள்; கணவன், "இருக்கா" தென்றான்.
உண்டுண் டுண்டென ஒலித்தது சுவரின்
அண்டையில் இருந்த அடுக்கும் மணிப்பொறி.
பாடம் சொல்லப் பாவை தொடங்கினாள்.
அவள் வாத் திச்சி அறைவீடு கழகம்;
தவழ்ந்தது சங்கத் தமிழ்ச்சுவை; அள்ளி
விழுங்கினார் பிள்ளைகள்; "வேளையா யிற்றே!

பள்ளிக்குப் பிள்ளைகள்

எழுங்கள்" என்றனள், எழுந்தனர்; சுவடியை
ஒழுங்குற அடுக்கி, உடை அணிவித்துப்
புன்னை இலைபோல் புதையடிச் செருப்புகள்
சின்னவர் காலிற் செருகிச் சிறுகுடை
கையில் தந்து, கையொடு கூட்டித்
தையல், தெருவரை தானும் நடந்து,
பள்ளி நோக்கித் தள்ளாடி நடக்கும்
பிள்ளைகள் பின்னழகு வெள்ளம் பருகிக்
கிளைமா றும்பசுங் கிளிபோல் ஓடி
அளவ ளாவினாள் ஆள னிடத்தில்.

கடைக்குப்போகும் கணவன்

கடைக்குச் செல்லக் கணவன், அழகிய
உடைகள் எடுத்தே உடுக்க லானான்.
"கழுத்துவரை உள்ள கரிய தலைமயிர்
மழுக்குவீர் அத்தான்"என்று மங்கை சொன்னாள்.
நறுநெய் தடவி நன்றாய்ச் சீவி
முறுக்கு மீசையை நிறுத்திச் சராயினை
இட்டிடை இறுக்கி எழிலுறத் தொங்கும்
சட்டை மாட்டத் தன்கையில் எடுத்தான்.
பொத்தலும் கிழிசலும் பூவை கண்டாள்;
தைத்தாள் தையற் சடுகுடு பொறியால்.
ஆண்டநாள் ஆண்டு மாண்ட செந்தமிழ்ப்
பாண்டிய மன்னன் மீண்டது போல,
உடுத்திய உடையும் எடுத்த மார்பும்
படைத்த கணவனைப் பார்த்துக் கிடந்தாள்.

வெற்றிலைச் சுருள்

ஒற்றி வைத்த ஒளிவிழி மீட்டபின்,
வெற்றிலைச் சுருள் பற்றி ஏந்தினாள்;
கணவன் கைம்முன் காட்டி, அவன்மலர்
வாயில் தரத்தன் மனத்தில் நினைத்தாள்.
தூயவன் அப்போது சொன்ன தென்னெனில்,
"சுருளுக்கு விலைஎன்ன? சொல்லுவாய்?" என்ன;
"பொருளுக்குத் தக்கது போதும்" என்றாள்.
"கையிற் கொடுப்பதைக் காட்டிலும் சுருளை
வாயிற் கொடுத்திடு மங்கையே" என்றான்.
சேயிழை அன்பாய்ச் செங்கை நீட்டினாள்.
குடித்தனப் பயனைக் கூட்டி எடுத்து
வடித்த சுவையினை வஞ்சிக் களித்தல்போல்
தளிர்க்கைக்கு முத்தம் தந்து,
குளிர்வாய் வெற்றிலை குழைய ஏகினனே!

அறுசீர் விருத்தம்
அவளின் காதலுள்ளம்

உணவுண்ணச் சென்றாள், அப்பம்
உண்டனள், சீனி யோடு
தணல்நிற மாம் பழத்தில்
தமிழ்நிகர் சுவையைக் கண்டாள்!
மணவாளன் அருமை பற்றி
மனம்ஒரு கேள்வி கேட்க,
'இணையற்ற அவன் அன்புக்கு
நிகராமோ இவைகள்' என்றாள்.

பிள்ளைகள் நினைவு

பள்ளிக்குச் சென்றி ருக்கும்
பசங்களில் சிறிய பையன்
துள்ளிக் குதித்து மான்போல்
தொடர்ந்தோடி வீழ்ந்தானோ, என்(று)
உள்ளத்தில் நினைத்தாள்;ஆனால்
மூத்தவன் உண்டென் றெண்ணித்
தள்ளினாள் அச்சந் தன்னை!
தாழ்வாரம் சென்றாள் நங்கை!

வீட்டு வேலைகள்

ஒட்டடைக் கோலும் கையும்
உள்ளமும் விழியும் சேர்த்தாள்;
கட்டிய சிலந்திக் கூடு,
கரையானின் கோட்டை யெல்லாம்
தட்டியே பெருக்கித் "தூய்மை"
தனியர சாளச் செய்து,
சட்டைகள் தைப்ப தற்குத்
தையலைத் தொட்டாள் தையல்!

தையல் வேலை

ஆடிக்கொண் டிருந்த தையற்
பொறியினை அசைக்கும் ஓர்கை;
ஓடிக்கொண் டிருக்கும் தைத்த
உடையினை வாங்கும் ஓர்கை!
பாடிக்கொண் டேயிருக்கும்
பாவையின் தாம ரைவாய்;
நாடிக்கொண் டேயிருக்கும்
குடித்தன நலத்தை நெஞ்சம்!

மரச்சாமான்கள் பழுது பார்த்தல்

முடிந்தது தையல் வேலை.
முன்உள்ள மரச்சா மான்கள்
ஒடிந்தவை, பழுது பார்த்தாள்;
உளியினால் சீவிப் பூசிப்
படிந்துள்ள அழுக்கு நீக்கிப்
பளபளப் பாக்கி வைத்தாள்.

கொல்லூற்று வேலை

இடிந்துள்ள சுவர் எடுத்தாள்;
சுண்ணாம்பால் போரை பார்த்தாள்.

மாமன் மாமிக்கு வரவேற்பு

நாத்தியார் வீடு சென்ற
நன்மாமன், மாமி வந்தார்.
பார்த்தனள்;உளம் மகிழ்ந்தாள்.
பறந்துபோய்த் தெருவில் நின்று
வாழ்த்திநல் வரவு கூறி
வணக்கத்தைக் கூறி, "என்றன்
நாத்தியார், தங்கள் பேரர்
நலந்தானா மாமி" என்றாள்.

வண்டிவிட் டிறங்கி வந்த
மாமியும், மாமனும், கற்
கண்டொத்த மரும கட்குக்
கனியொத்த பதிலுங் கூறிக்
கொண்டுவந் திட்ட பண்டம்
குறையாமல் இறக்கச் சொன்னார்.
வண்டியில் இருந்த வற்றை
இறக்கிடு கின்றாள் மங்கை.

மாமி மாமன் வாங்கி வந்தவை

கொஞ்சநாள் முன்வாங் கிட்ட
கும்ப கோணத்துக் கூசா,
மஞ்சள்,குங் குமம், கண்ணாடி,
மைவைத்த தகரப் பெட்டி,
செஞ்சாந்தின் சீசா,சொம்பு,
வெற்றிலைச் சீவற் பெட்டி,
இஞ்சியின் மூட்டை ஒன்றே,
எலுமிச்சைச் சிறிய கோணி,

புதியஓர் தவலை நாலு,
பொம்மைகள்,இரும்புப் பெட்டி
மிதியடிக் கட்டை,பிள்ளை
விளையாட மரச்சா மான்கள்;
எதற்கும்ஒன் றுக்கி ரண்டாய்
இருக்கட்டும் வீட்டில் என்று
குதிரினில் இருக்கும் நெல்லைக்
குத்திட மரக்குந் தாணி;

தலையணை, மெத்தைக் கட்டு,
சல்லடை, புதுமு றங்கள்,
எலிப்பொறி, தாழம் பாய்கள்;
இப்பக்கம் அகப்ப டாத
இலுப்பெண்ணெய், கொடுவாய்க் கத்தி,
இட்டலித் தட்டு, குண்டான்,
கலப்பட மிலாநல் லெண்ணெய்;
கைத்தடி,செந்தா ழம்பூ;

திருமணம் வந்தால் வேண்டும்
செம்மரத் தினில்முக் காலி;
ஒருகாசுக் கொன்று வீதம்
கிடைத்த பச்சரிசி மாங்காய்;
வரும்மாதம் பொங்கல் மாதம்
ஆதலால் விளக்கு மாறு;
பரிசாய்ச் சம்பந்தி தந்த
பாதாளச் சுரடு, தேங்காய்;

மூலைக்கு வட்டம் போட்டு
முடித்தமே லுறையும், மற்றும்
மேலுக்கோர் சுருக்குப் பையும்
விளங்கிடும் குடை, கறுப்புத்
தோலுக்குள் காயிதத்தில்
தூங்கும்மூக் குக்கண் ணாடி,
சேலொத்த விழியாள் யாவும்
கண்டனள் செப்ப லுற்றாள்:

மருமகள் வினா

"இவையெல்லாம் வண்டிக் குள்ளே
இருந்தன என்றால் அந்த
அவைக்களம் தனிலே நீவிர்
எங்குதான் அமர்ந்திருந்தீர்?
சுவைப்புளி அடைத்து வைத்த
தோண்டியின் உட்பு றத்தில்
கவர்ந்துண்ணும் பூச்சி கட்கும்
கால்வைக்க இடமிராதே?"

மாமி விடை

என்றனள்; மாமி சொல்வாள்:
"இவைகளின் உச்சி மீதில்
குன்றுமேல் குரங்கு போல
என்றனைக் குந்த வைத்தார்!
என்தலை நிமிர, வண்டி
மூடிமேல் பொத்த லிட்டார்;
உன்மாமன் நடந்து வந்தார்.
ஊரெல்லாம் சிரித்த" தென்றாள்!

மாமன் பேச்சு

"ஊரெல்லாம் சிரிக்க வைத்தேன்
என்றாளே உன்றன் மாமி!
யாரெல்லாம் சிரித்து விட்டார்?
எனஉன்றன் மாமியைக் கேள்;
பாரம்மா பழுத்த நல்ல
பச்சைவா ழைப்ப ழங்கள்!
நேரிலே இதனை யும்பார்
பசுமாட்டு நெய்யின் மொந்தை!

வண்டியில் எவ்வி டத்தில்
வைப்பது? மேன்மை யான
பண்டத்தைக் காப்ப தற்குப்
பக்குவம் தெரிந்தி ருந்தால்
முண்டம்இப் படிச் சொல்வாளா?
என்னதான் முழுகிப் போகும்
அண்டையில் நடந்து வந்தால்?"
என்றனன், அருமை மாமன்.

மருமகள் செயல்

மாமனார் கொண்டு வந்த
பொருளெலாம் வரிசை செய்து,
தீமையில் லாத வெந்நீர்
அண்டாவில் தேக்கி வைத்துத்
தூய்மைசேர் உணவு தந்து,
துப்பட்டி விரித்த மெத்தை
ஆம்,அதில் அமரச் சொல்லிக்
கறிவாங்க அவள் நடந்தாள்.

கடையிலே செலவு செய்த
கணக்கினை எழுதி வைத்தாள்;
இடையிலே மாமன் "விக்குள்
எடுத்தது தண்ணீர் கொஞ்சம்
கொடு"எனக் கொடுத்தாள். பின்னர்க்
கூடத்துப் பதுமை ஓடி
அடுக்களை அரங்கில், நெஞ்சம்
அசைந்திட ஆட லானாள்.

என்ன கறி வாங்கலாம்?

கொண்டவர்க் கெது பிடிக்கும்
குழந்தைகள் எதை விரும்பும்
தண்டூன்றி நடக்கும் மாமன்
மாமிக்குத் தக்க தென்ன
உண்பதில் எவரு டம்புக்(கு)
எதுவுத வாதென் றெல்லாம்
கண்டனள், கறிகள் தோறும்
உண்பவர் தம்மைக் கண்டாள்!

பிள்ளைகள் உள்ளம் எப்படி?

பொரியலோ பூனைக் கண்போல்
பொலிந்திடும்; சுவை மணக்கும்!
"அருந்துமா சிறிய பிள்ளை"
எனஎண்ணும் அவளின் நெஞ்சம்;
இருந்தந்தச் சிறிய பிள்ளை
இச்சென்று சப்புக் கொட்டி
அருந்தியே மகிழ்ந்த தைப்போல்
அவள்காதில் ஓசை கேட்கும்!

அத்தானுக்கு எது பிடிக்கும்?

பொருளையும் பெரிதென் றெண்ணாள்,
பூண்வேண்டாள்; தனைம ணந்தோன்
அருளையே உயிரென் றெண்ணும்
அன்பினாள், வறுத்தி றக்கும்
உருளைநற் கிழங்கில் தன்னை
உடையானுக் கிருக்கும் ஆசைத்
திருவுளம் எண்ணி எண்ணிச்
செவ்விள நகைசெய் கின்றாள்.

எதிர்கால நினைவுகள்

இனிவாழும் நாள் நினைத்தாள்
இளையவர் மாமன் மாமி;
நனிஇரங் கிடுதல் வேண்டும்;
நானவர்க் கன்னை போல்வேன்.
எனதத்தான் தனையும் பெற்று
வாழ்ந்தநாள் எண்ணும் போதில்
தனிக்கடன் உடையேன், நானோர்
தவழ்பிள்ளை அவர்கட் கென்றாள்.

கிழங்கினை அளியச் செய்வாள்,
கீரையைக் கடைந்து வைப்பாள்
கொழுங்காய்ப்பச் சடியே வைப்பாள்
கொல்லையின் முருங்கைக் காயை
ஒழுங்காகத் தோலைச் சீவிப்
பல்லில்லார் உதட்டால் மென்று
விழுங்கிடும் வகை முடித்து
வேண்டிய எலாம் முடித்தே.

முதியவருக்குத் துணை

தூங்கிய மாமன் "அம்மா
தூக்கென்னை" என்று சொல்ல,
ஏங்கியே ஓடி மாமன்
இருக்கின்ற நிலைமை கண்டு,
வீங்கிய காலைப் பார்த்தாள்
"எழுந்திட வேண்டாம்!" என்றாள்;
தாங்கியே மருந்து பூசிச்
சரிக்கட்டிப் படுக்க வைத்தாள்.

அவளோர் மருத்துவச்சி

நாடியில் காய்ச்சல் என்றே
நன்மருந் துள்ளுக் கீந்தாள்;
ஓடிநற் பாலை மொண்டு,
மருவுலைக் கஞ்சி ஊற்றி,
வாடிய கிழவர்க் கீந்தாள்;
மாமிக்கோ தலைநோக் காடாம்,
ஓடிடச் செய்தாள் மங்கை
ஒரேபற்றில் நொடிநே ரத்தில்.

அள்ளி அணைத்தாள் பிள்ளைகளை

குழந்தைகள் பள்ளி விட்டு
வந்தார்கள்; குருவிக் கூட்டம்
இழந்தநல் லுரிமை தன்னை
எய்தியே மகிழ்வ தைப்போல்;
வழிந்தோடும் புதுவெள் ளத்தை
வரவேற்கும் உழவரைபோல்,
எழுந்தோடி மக்கள் தம்மை
ஏந்தினாள் இருகை யாலும்!

உடை மாற்றினாள்

பள்ளியில் அறிஞர் சொன்ன
பாடத்தின் வரிசை கேட்டு,
வெள்ளிய உடை கழற்றி,
வேறுடை அணியச் செய்தே,
உள்வீட்டில் பாட்டன் பாட்டி
உள்ளதை உணர்த்தி, அந்தக்
கள்ளினில் பிள்ளை வண்டு
களித்திடும் வண்ணம் செய்தாள்!

தலைவி சொன்ன புதுச்செய்தி

அன்றைக்கு மணம் புரிந்த
அழகியோன் வீடு வந்தான்;
இன்றைக்கு மணம் புரிந்தாள்
எனும்படி நெஞ்சில் அன்பு
குன்றாத விழியால், அன்பன்
குளிர்விழி தன்னைக் கண்டாள்;
"ஒன்றுண்டு சேதி" என்றாள்;
"உரை"என்றான்; "அம்மா அப்பா

வந்தார்"என் றுரைத்தாள், கேட்டு
"வாழிய" என்று வாழ்த்தி,
"நொந்தார்கள்" என்று கேட்டு
நோயுற்ற வகை யறிந்து,
தந்தைதாய் கண்டு "உங்கள்
தள்ளாத பருவந் தன்னில்
நைந்திடும் வண்ணம் நீங்கள்
நடந்திட லாமா? மேலும்,

முதியோர்க்கு

ஒக்கநல் லிளமை கண்டீர்
கல்விநல் லொழுக்கம் கண்டீர்;
மெய்க்காதல் மணமும் பெற்றீர்;
இல்லற வெற்றி பெற்றீர்;
மக்களைப் பெற்றீர்;வைய
வழ்வெலாம் பெற்றீர்; என்னால்
எக்குறை பெற்றீர்? இன்னும்
ஏனிந்தத் தொல்லை ஏற்றீர்?

அதிர்ந்திடும் இளமைப் போதில்
ஆவன அறங்கள் செய்து,
முதிர்ந்திடும் பருவந் தன்னில்
மக்கட்கு முடியைச் சூட்டி,
எதிர்ந்திடும் துன்ப மேதும்
இல்லாமல் மக்கள், பேரர்
வதிந்திடல் கண்டு, நெஞ்சு
மகிழ்வதே வாழ்வின் வீடு!"

அறிவுக்குத் திருவிளக்கு

என்றனன்; தந்தை சொல்வார்:
"என்னரும் மகனே, மெய்தான்
ஒன்றிலும் கவலை கொள்ளேன்
உன்னைநான் பெற்ற தாலே!
அன்றியும் உன்பெண் டாட்டி
அறிவுக்கோர் திரு விளக்காம்,
இன்றுநான் அடைந்த நோய்க்கும்
நன்மருந் திட்டுக் காத்தாள்.

செல்லப்பா உணவு கொள்ளச்
சிறுவர்கள் தமையும் உண்ணச்
சொல்லப்பா!" எனவே, அன்பு
சொரிந்திடச் சொல்லி டுந்தன்
நல்லப்பா மகிழும் வண்ணம்
நல்லதப் பாஎன் றோதி,
மெல்லப்பா வைபு ரிந்த
விருந்தினை அருந்த லுற்றான்.

பிள்ளைக்கு அமுது

குழந்தைகள் உடனி ருந்து
கொஞ்சியே உண்ணு கின்றார்
பழந்தமிழ்ப் பொருளை அள்ளிப்
படித்தவர் விழுங்குதல் போல்!
ஒழுங்குறு கறிகள் தம்மில்
அவரவர் உளம றிந்து
வழங்கினாள் அள்ளி அள்ளி,
வழிந்திடும் அன்புள் ளத்தாள்.

பாடு என்றான்

அனைவரும் உண்டார் அங்கே!
கூடத்தில் அமர்ந்தி ருந்தார்.
சுனைவரும் கெண்டைக் கண்ணாள்
துணைவனை அணுகி, "நீவிர்
எனைவரும் படிஏன் சொல்ல
வில்லை" என்றாள் சிரித்தே!
'தினைவரும் படிஇல் லார்க்கும்
திருநல்கும் தமிழ்பா' டென்றான்.

யாழ் எடுத்தாள்

குளிர்விழி இளநகைப் பூங்
குழலினாள் குந்தினாள்; தன்
தளிருடல் யாழ் உடம்பு
தழுவின; இரு குரல்கள்
ஒளியும் நல்வானும் ஆகி
உலவிடும் இசைத்தேர் ஏறித்
"தெளிதமிழ்" பவனி வந்தாள்
செவிக்கெலாம் காட்சி தந்தாள்.

கவிதை பாய்ச்சினாள்

உள்ளத்தில் கவிதை வைத்தே
உயிரினால் எழுப்பி னாள்;அவ்
வெள்ளத்தில் சுவையைக் கோத்தாள்;
வீணையின் அளவிற் சாய்த்தாள்;
தெள்ளத்தெ ளிந்த நீர்போல்,
செந்தமிழ்ப் பொருள்போல் நெஞ்சப்
பள்ளத்தில் கோடைத் துன்பம்
பறந்திடப் பாய்ச்சி விட்டாள்.

உயிரெல்லாம் தமிழில் தொக்கின

வீடெல்லாம் இசையே; வீட்டில்
நெஞ்செலாம் மெருகே; நெஞ்ச
ஏடெலாம் அறிவே; ஏட்டின்
எழுத்தெலாம் களிப்பே; அந்தக்
காடெலாம் ஆடும் கூத்தே;
காகங்கள் குருவி எல்லாம்
மாடெல்லாம் இவ்வா றானால்
மனிதர்க்கா கேட்க வேண்டும்?

கடையை மறந்தீரோ?

இடையினில் தனை மறந்தே
இருந்ததன் கணவன் தன்னைக்
"கடையினை மறந்து விட்டீர்
கணக்கர்காத் திருப்பார்" என்று
நடையினில் அன்னம் சொன்னாள்;
நல்லதோர் நினைவு பெற்ற
உடையவன் "ஆம் ஆம்" என்றான்;
ஆயினும் "உம் உம்" என்றான்.

மனைவியிடம் பிச்சை கேட்டான்

"கண்ணல்ல; நீதான் சற்றே
கடைக்குப் போய்க் கணக்கர் தம்மை
உண்பதற் கனுப்பி, உண்டு
வந்தபின் வா; என் னாசைப்
பெண்ணல்ல" என்று சொல்லிச்
சோம்பலால் பிச்சை கேட்டான்.
கண்ணல்ல, கருத்தும் போன்றாள்,
"சரி"என்று கடைக்குச் சென்றாள்.

 

 
Tag : kudumpavilakku, Bharathidasan, Bharathidasan Kavithaigal,Kavithaigal, Tamil Literature, Tamil Noolgal, Tamil Noolkal
 
[ மேற்புறம் ]
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later