New Register   -  Login     
Tamil Mozhi - Literatures
 - தமிழ்மொழி முகப்பு » இலக்கியங்கள் » கவிதைகள் » பாரதிதாசன் கவிதைகள் »
சேனல்கள்
இணைப்புகள்

பாண்டியன் பரிசு(Pandiyan Parisu)

 
[1] [2] [3] [4] [5] [6]
 
 
பாவேந்தர் முன்னுரை

உரை நடையால் எழுதுவதினும், கவிதையால், குறைந்த
சொற்களால் ஒன்றைச் சொல்லி முடித்து விடலாம்.

"பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்"

என்றார் வள்ளுவர்.

முதலில் உரை நடையால் இக்கதையை ஆக்கினேன்;
மிகப் பெருஞ்சுவடியாதல் கூடும்எனத் தோன்றவே,
ஏறக்குறைய நானு¡று எண் சீர் விருத்தங்களால்
எழுதி முடித்தேன்.

தொடக்கப் படிப்பினரும் புரிந்து கொண்டார்கள்
இச்செய்யுளின் பொருளை எனின் - அதுதான்
எனக்குமகிழ்ச்சி யூட்டுவது!

எளிய நடை ஒன்றாலேயே தமிழின் மேன்மையைத்
தமிழின் பயனைத் தமிழர்க்கு ஆக்கமுடியும் என்பது
என் அசைக்க முடியாத நம்பிக்கை.

பாரதிதாசன்.

இவர்கள் யார்?

வேலன் கதைத் தலைவன்
அன்னம் கதைத் தலைவி

வீரப்பன் வேலனின் தந்தை; திருடர் தலைவன்
ஆத்தாக் கிழவி வீரப்பன் மனைவி

கதிரைவேல் அன்னத்தின் தந்தை;

கதிர் நாட்டரசன்
கண்ணுக்கினியாள் கதிர் நாட்டரசி

வேழமன்னன் வேழ நாட்டரசன்
நரிக்கண்ணன் அன்னத்தின் தாய்மாமன்;
வேழநாட்டுப் படைத்தலைவன்
பொன்னப்பன் நரிக்கண்ணன் மகன்

சீனி கணக்காயர்; வேலனின் ஆசிரியர்

நீலன் கதிர் நாட்டமைச்சன் மகன்
நீலி நீலனின் காதலி; அன்னத்தின் தோழி

பாண்டியன் பரிசு

இயல்

கதிர்நாட்டை நோக்கி வேழநாட்டுப் படை.

சீர்மிகுத்த கதிர்நாட்டின் மேலே, அந்தத்
திறல்மிகுத்த வேழநாட் டுப்ப டைகள்,
போர்தொடுக்கப் பாய்ந்தனவாம் கடலைப் போலே!
பொன்னொளியைப் பாய்ச்சுகின்ற தேர்ப்ப டைகள்,
கார்மிகுத்தாற் போலேயா னைப்ப டைகள்,
கழுத்துமயிர் ஆடுகுதி ரைப்ப டைகள்,
நேர்மிகுத்த வில், வேல், வாள் து¡க்கி வந்த
நெடியகா லாட்படைகள் இவைகள் யாவும்,

மண்ணதிர விரைந்தனவாம்! முரசு, "வெற்றி
வாய்க" என முழங்கினவாம்! சங்கும் மற்றும்
பண்ணதிரும் கருவிபலப் பலவும் கூடிப்
பாரதிரச் செய்தனவாம்! கொடியின் கூட்டம்
விண்ணதிரப் பறந்தனவாம்! ஆயு தங்கள்
விழியதிர மின்னினவாம்! படைத்தலைவர்,
கண்ணதிரும் கனல்சிந்திப் படைந டத்தக்
கழறுமொழி ஒவ்வொன்றும் அதிர்வேட் டேயாம்!

கதிர்நாட்டின் நெடுங்கோட்டை மதிலின் மீது
கைகாட்டி "வாபகையே" எனஅ ழைக்கும்
புதுமைபோல் கொடிபறக்கக் கண்டார் அன்னோர்!
"போவீர்கள் விரைவாகப் பகைவர் கோட்டை
அதோபாரீர்!" எனஉரைத்தார் படைத்த லைவர்;
ஆம் என்று குதித்தார்கள் மறவ ரெல்லாம்;
அதிரும்நடை யாற்புழுதி விண்ணில் ஏற
ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடிச் சென்றார்!

இயல் 2

கதிர்நாட்டின் வேவு பார்ப்போர் பகைப்படை
வருவதைப் பார்த்தார்கள்!

அழகிய அக்கதிர்நாட்டுக் கோர்கா தத்தில்
அவ்வேழப் படைநெருங்கும் காட்சி தன்னை,
விழிஇமைத்தல் இல்லாமல் வேவு பார்ப்போர்
விண்ணுயர்ந்த மதிலின்மேல் நின்று பார்த்தார்.
மொழிஅதிர்த்தார், பறை அதிர்த்தார்; "வேழ நாட்டான்
முழுப்படையும் எழுப்பிவந்தான்" என்று தங்கள்
பழியற்ற தாய்நாட்டார் அறியச் செய்தார்.
கதிர்நாட்டின் படைமறவர் கொதித்தெ ழுந்தார்.

அமைதிகுடி கொண்டிருந்த கதிர்நா டந்தோ
அலறிற்று! முதியோர்கள் கலங்கி னார்கள்!
தமக்காக அன்றித் தம் கணவர், மக்கள்
தமைஎண்ணி மகளிரெலாம் நடுங்கி னார்கள்!
"நமக்குரிய நாட்டினிலே பகைவர் கால்கள்
நாட்டுவதை நாம்ஒப்ப லாமோ?" என்று
சிமிழ்க்காத விழியினராய் வாளைத் து¡க்கிச்
சினத்தோடு வெளிப்போந்தார் இளைஞர் எல்லாம்.

இயல் 3

சதிராடு கூடத்தில் அரசன், அரசி.

கதிர்நாட்டின் கதிரைவேல் மன்னன் தானும்,
காதல்மனை யாம்கண்ணுக் கினியாள் தானும்
சதிராடு கூடத்தில் தவிச மர்ந்து
தமிழ்ப்பூவால் இசைப்பாக்கள் புனைந்தி ருந்தார்.
"அதிர்படைகள் கூட்டிவந்தான் வேழ நாட்டான்
அதோஒருகா தத்தில்" என்றான் படைத்த லைவன்!
"எதிர்த்தானா வேழமன்னன்? நரிகண் ணன்தான்
எமைநோக்கிப் படைநடத்த ஒப்பி னானா?

என்கண்ணுக் கினியாளே, அன்பே! உன்றன்
எழில்அண்ணன் நரிக்கண்ணன், வேழ நாட்டின்
வன்மையுறு படைத்தலைவ னாய்இ ருந்தும்
வேழர்படை வருவதை, ஏன் என்னிடத்தில்
முன்னமே சொல்லவில்லை? வேழ நாட்டான்
முழுதும்நமை ஆதரிப்ப தாக அன்றோ
சொன்னான்?இந் நாட்டினிலே நம்ப டைகள்
தோதில்லா திருக்கையிலே நமைஎ திர்த்தார்!

இந்நாட்டை உன்அண்ணன் பெறநி னைத்தான்!
என்படையின் தளர்நிலையை, அவனை யல்லால்
பின்எவரும் அறியாரே! உடன்பி றந்தான்
பெரும்பகைவன் எனக்கு! நெடு வைய மீதில்
என்ஆவி போன்றவள்நீ! என்ன செய்வேன்?
என்வெற்றி உன்துன்பம் அன்றோ பெண்ணே!
மன்னவன்நான் எனைநம்பி வாழு கின்ற
மக்கட்கோ என்கடமை ஆற்ற வேண்டும்."

என்றுபல வாறுரைத்து நின்றான்! அங்கே
எதிரினிலே அரசனது கட்ட ளைக்கு
நின்றிருந்தான் படைத்தலைவன்; அமைச்சன் நின்றான்!
நெடுவிழியிற் கனல்சிந்த அரசி சொல்வாள்:
"முன்ஒருநாள் என்அண்ணன் இங்கு வந்தான்
ஏதேதோ மொழிந்திட்டான், என்னிடத்தில்.
அன்னவற்றின் பொருள்இந்நாள் அறியலானேன்;
அழகியஎன் திருநாட்டை அவன்ப றிக்கத்

திட்டமிட்டான்! மணவாளா உன்றன் ஆணை!
திருநாட்டின் மீதாணை! இந்நாட் டின்கண்
மட்டற்ற மகிழ்ச்சியுடன் வாழு கின்ற
மக்கள்மேல் எனக்குள்ள அன்பின் ஆணை!
விட்டேனா அன்னவனை! அண்ணன் அல்லன்!
விரைவினிலே போர்க்களத்தை அடைவேன்; எந்த
வட்டத்தில் அவனுண்டோ அங்கன் னோனை
மாய்த்திடுவேன் அல்லதுநான் அவனால் மாய்வேன்!

என்அண்ணன் இந்நாட்டில் நுழைவ தாயின்
என்உயிரில் நுழைந்ததன்பின் நுழைக! நானோ
அன்னவனின் உயிர்குடித்த பின்ன ரேஇவ்
அரண்மனையில் அகத்து¡ய்மை நிரம்பப் பெற்றே
என்கால்வைப் பேன்உறுதி" என்றாள். ஒடி
எதிரில்உறு படைவீடு சென்று மீண்டே
என்அண்ணன் எங்குள்ளான் அங்கே செல்க
என்றாள்; தேர் ஏறினாள் எரியும் கண்ணாள்!

துணையாக ஒருபடையும் அவளின் தேரைத்
தொடர்ந்ததுதன் நிழல்போலே! கதிரை வேலன்
தணல்சிந்தும் விழியாலே நாற்பு றத்தும்
தமிழ்மறவர் தமைஏவித் தெற்குக் கோட்டை
மணிவாயில் தனையடைந்தான் சிங்கத் தைப்போல்!
மன்னவன்தான் பெற்றெடுத்த அன்னம் என்பாள்,
அணிமலர்ச்சோ லைவிட்டே அரண்ம னைக்குள்
அடிவைத்தாள்; நொடிப்போதில் நிலமை கண்டாள்.

இயல் 4

கதிரைவேல் மன்னன் மகள் அன்னம் திகைத்தாள்.

கோட்டைவா யிற்புறத்தே வாள்அ திர்ப்பும்
குதிரைகளின் குளம்படியின் ஒலியும், யானைக்
கூட்டத்தின் மோதுதலும், தேர்அ திர்ப்பும்,
கொலையுண்ணும் மறவர்விழும் ஒலியும், நன்கு
கேட்டிருந்தாள் இளமங்கை வள்ளைக் காதில்.
கிளியுதடு கனல்சிந்தும், துடிக்கும்; அஞ்சும்!
வாட்போரை விரும்பும்அவள் தமிழ நெஞ்சம்
வகையறியா அவள்இளமை மறுத்து நிற்கும்.

என்ஆத்தா என்செய்வேன் என்றாள் மங்கை!
எதிர்நின்ற அக்கிழவி இயம்பு கின்றாள்:
"உன்மாமன் படைகூட்டி வந்தான் பெண்ணே
உன்பெற்றோர் வாள்து¡க்கி ஓடி யுள்ளார்.
இந்நிலையில் இறக்கைமுளைக் காத அன்னம்
ஏன்பறக்க நினைக்கின்றாய்? முடிவு காண்போம்!
கன்னலின்சா றேஇங்கு வந்த மர்வாய்!
கைப்புறத்தில் வா" என்று சென்ற ணைத்தாள்.

இயல் 5

கடும்போர்.

வடக்கிருந்த வாயிலிலே கதிரை வேலன்
வந்தெதிர்த்த பெரும்படைமேற் படையை ஏவி
அடுத்துநின்ற வேழமன்னன் வாள்வீச் சுக்கள்
அத்தனைக்கும் விடைகூறித் தன்வீச் சுக்கும்
கொடுத்தவிடை பெற்றபடி இருந்தான்! சாவு
கொற்றவர்கள் இருவர்பால் மாறி மாறி
நொடிக்குநொடி நெருங்கிற்று! வெற்றி மங்கை
நு¡றுமுறை ஏமாந்தாள் ஆளைத் தேடி!

கனல்நிகர்த்த வேழவனின் பெரும்ப டைமேல்
கதிரைவேல் மன்னவனின் மறவர் சில்லோர்
சினங்கொண்டு பாய்ந்தார்கள். வேழ நாட்டுத்
திறல்மறவர் நு¡ற்றுவர்க்குக் கதிர்நாட் டார்கள்
தனியொருவன் விழுக்காடு தோள்கொ டுத்துத்
தனித்துநின்றார் கோட்டைக்குள் பகைபு காமல்!
பனைமரங்கள் இடிவீழக் கிழிந்து வீழும்
பான்மைபோல் இருதிறத்தும் மறவர் வீழ்ந்தார்.

என்செய்வார் கதிர்நாட்டார்? வேழ வர்க்கோ
இரும்படைகள் அணைகடந்த வெள்ளத் தைப்போல்
பின்னுதவி செய்தனமேல் வந்து வந்து!
கதிர்நாட்டார் பெருந்தோளும் கூர்மை வாளும்
முன்னிலும்பன் மடங்குவிரைந் தனஎன் றாலும்
முனை நடுங்கப் போராடும் கதிரை வேலன்,
இந்நிலைமை தனையுணர்ந்து வேழன் தன்னைத்
தனிப்படுத்த எண்ணினான்; இறங்கி னான்கீழ்.

ஏறிவந்தான் வேழத்தான். கோட்டைக் குள்ளே
இருவேந்தர் தனியிடத்தில் போர்புரிந்தார்!
சீறினஅங் கிருவாள்கள்; மோத லாலே
செம்பொறிகள் எழுந்தனமேல்! வெற்றி தோல்வி
கூறிடவும் வழியின்றி வலம்இ டம்போய்க்
குறிப்பொன்றும் தவறாமல் சுழன்று, வாளை
மாறிப்பின் வாங்குங்கால் பலகை து¡க்கி
வாட்போருக் கிலக்கியத்தை நல்கும் போதில்,

இயல் 6

கண்ணுக்கினியாள் அண்ணனைத் தேடினாள்.

"அண்ணன்எங்கே! அன்பில்லாக் கொடிய னெங்கே
ஆட்சியினை யேவிரும்பி உடன்பிறந்த
பெண்ணாளை வஞ்சிக்க எண்ணி வந்து
பிழைசுமந்த நரிக்கண்ணன் வாள் சுமந்து
கண்ணெதிரில் வாரானோ?" என்று கூறிக்
கடிவாளம் ஒருகையில், பகைவர் பெற்ற
புண்ணினிலே குதித்தெழுந்த வாளோர் கையில்,
புதுமைசெய ஒருகுதிரை மீதி லேறி

பகைப்படையின் உட்புகுந்து தேடிக் கண்ணிற்
பட்டவரின் உடல்சாய்த்தே புறங்கள் எட்டும்,
நகைப்பாலே நெருப்பாக்கிப் புருவம் ஏற்றி
நாற்புறத்து வாயிலையும் சுற்றி வந்தாள்!
மிகப்பெரிய குதிரைமேல் கரிய ஆடை
மேற்போர்த்து முகமூடி அணிந்தே ஓர்ஆள்
புகப்பார்த்தான் வடக்கிருந்த வாயில் நோக்கி!
"போ" என்றாள். பறந்தது தன் குதிரை அங்கே!

இயல் 7

வேழமன்னனோடு போர் புரிந்திருந்த கதிரைவேல்
மன்னனைப் பின்னிருந்து கொன்றான்
நரிக்கண்ணன்.

போர்செய்து கொண்டிருந்த கதிரை வேலன்
பொத்தெனவீழ்ந் தான்.அவனின் முதுகின் மீதில்
ஓர்ஈட்டி பாய்ந்தது போய்! கருந்தி ரைக்குள்
உடல்மறைத்துக்கொண்டிருந்த நரிக்கண் ணன்,தன்
பேர்மறைக்க எண்ணியே தான் அணிந்த
பெருந்திரையை, முகமூடித் துணியை அங்கு
நேர்நின்ற தன்ஆளை அணியச் செய்து
நெடிதுபோய் அரண்மனையில் நின்றி ருந்தான்.

நின்றிருந்த நரிக்கண்ணன், உடன்பிறந்த
நேரிழையாள் வரும்வழியில் விழியை வைத்தான்;
"அன்றிருந்த என்கருத்தில் பாதி தீர்த்தேன்;
அவள் ஒழிந்தால், முக்காலும் தீரும்; பின்னும்
அன்னத்தைக் கொன்றொழித்தால் முழுதும் தீரும்;
அதன்பிறகன் றோஇந்த நாட்டின் ஆட்சி,
என்றென்றும் என்கையில் நிலைத்து நிற்கும்?"
எனநினைத்தான் தினையேனும் மானம் இல்லான்.

இயல் 8

கண்ணுக்கினியாள் மன்னன் இறந்தது கண்டாள்.

கொலைவாளும் கையுமாய் அரசி வந்தாள்;
கொண்டவனைப் பிணமாகக் கண்டாள். ஆங்கே
நிலைகலங்கி நின்றிட்டாள். "வீழ்ந்த தோநின்
நெடுமேனி! வீழ்ந்ததோ கதிர்நாடிந்நாள்!
இலைநீதான் எனஅறிந்தால்அஞ்சி வாடும்
இந்நாட்டு மக்களை யார் தேற்று வார்கள்?
கலைந்ததுவோ என்காதல் ஓவியந்தான்!"
எனக்கூறிக் கட்டழகன் உடலை அள்ளி

அணைத்திட்டாள்! மலர்க்கையால் கன்னம் உச்சி
அணிமார்பு தடவினாள்! ஈட்டி யாலே
தணல்போலும் புண்பட்ட முதுகு கண்டாள்;
தலைகுனிந்தாள்; அப்பிணத்தை நிலத்திற் போட்டாள்!
இணைபிரியா மானமதும் எம்மை விட்டே
ஏகிற்றோ ஐயகோ! முதுகு காட்டத்
துணிந்ததுவோ தமிழாநின் தமிழ நெஞ்சம்!
து¡யநின் மூதாதை, என்மூ தாதை

அனைவருள்ளும் எவரேனும் பகைவன் வாளை
அருமார்பில் முன்தோளில் ஏற்ற தன்றித்
தினையளவும் திரும்பிப்பின் முதுகில் ஏற்ற
சேதியினை இவ்வையம் கேட்ட துண்டோ?
எனக்கூவித் திரும்புங்கால், எதிரில் நின்ற
இளவேழ நாட்டரசன், இரக்க மிஞ்ச
"மனைவிளக்கே! நின்துணைவன் கதிரை வேலன்
வாட்போரை என்னோடு நிகழ்த்துங் காலை

முகமறைத்த ஒருதீயன் எவனோ பின்னே
முடுகிவந்து நடுமுதுகில் எறிந்தான் ஈட்டி!
திகைத்தேன் நான்! சாய்ந்தான்அம் மறவோர் மன்னன்!
திகழிமய மலைபோலும் அவன்கொண் டுள்ள
புகழ்க்கென்ன? உன்குடிக்கு வாய்த்த மானம்
போனதெனப் புலம்பவதும் என்ன? பெண்ணே
அகத்துன்பம் நீங்கியிரு! செல்க உன்றன்
அரண்மனைக்கே" என்றுரைத்தான் சென்றாள் பெண்ணாள்.

இயல் 9

அரண்மனைக்குள் படை புகுந்தது.
அன்னத்தை ஆத்தாக்கிழவி காத்தாள்.

வேழவனின் படை வீரர் அரண்ம னைக்குள்
விரிநீர்போய் மடைதோறும் பாய்வ தைப்போல்
சூழலுற்றார் பொன்னிருப்புச் சாலைக் குள்ளும்,
தொகுநெற்க ளஞ்சியத்தும் எவ்வி டத்தும்!
ஏழடுக்கும் படைவீரர் கைப்பற் றுங்கால்
இருந்தஆத் தாக்கிழவி உளம்ப தைத்துக்
கீழைவழி நிலவறையால் அன்னந் தன்னைக்
கிளியேந்தல் போலேந்தி வெளியிற் சென்றாள்.

நிலவறையால் வெளிப்புறத்தில் சென்ற ஆத்தா
நீங்கியபின் கதவுதனைச் சாத்த வில்லை.
சிலர்கண்டார் காணாத கதவு தன்னை!
சிலர்புகுந்தார்; சிலர்உள்ளே செல்ல லானார்.
சிலர்நெடிது சென்றுமே அரண்ம னைக்குள்
திறல்கொண்ட வேழநாட் டுப்ப டைகள்
அலைவதைக்கண் டையோஎன் றுரைத்து மீண்டார்.
ஆயினும்சிற் சிலர்இருந்தார்! நரிக்கண் ணன்தான்

எப்புறத்தும் திரிகின்றான்; ஓர்அ றைக்குள்
எதிர்பார்த்த ஒருபேழை தன்னைக் கண்டான்.
அப்படியே து¡க்கினான்; அடுத்தி ருந்த
ஆள்ஒருவ னிடந்தந்தான்; "இதனை என்றன்
குப்பனெனும் தேரோட்டி இடம்சேர்" என்று
கொடுத்தனுப்பித் தான்நினைத்த சூழ்ச்சி தன்னை
அப்போதே தொடங்கினான், பொய்ப்பால் வாழ்வான்.
அரசிக்கு நல்லவனாய்த் தன்னைக் காட்ட

அரசர்தமைக் குடிகள்எலாம் காணு கின்ற
அழகியதோர் கூடத்தில் கீழ்க்கி டந்து
சரசரெனப் புரண்டபடி "எனக்கேன் வாழ்வு?
சாக்காடே வாராயோ? உடன்பி றந்தாள்
அரசியென வாழ்கின்றாள் எனஇ ருந்தேன்.
அத்தீயன் வேழத்தான் கதிர்நா டாளும்
பெருமைகொள் என் மைத்துனனைக் கொலைபு ரிந்து
பிடுங்கினான் நாட்டையும்"என் றழுதி ருந்தான்.

இயல் 10

கண்ணுக்கினியாள் வந்தாள்.
நரிக்கண்ணன் வஞ்சம் பேசினான்.

வாள்தொங்க, வாள்பெற்ற வலக்கை தொங்க,
வல்லியிடை துவள,மேல் நல்ல தோள்கள்
ஆட,எடுத் து¡ன்றும்அடி இடறக் கண்ணில்
அழகிழந்து குழல்சரிந்து வீழ மங்கை
"நாடிழந்தேன் நலமிழந்தேன் கண்ணில் வைத்து
நாளும்எனைக் காத்துவந்த துணைஇ ழந்து
வாடுகின்றேன்" எனக்கதறி நெஞ்சம் சோர
வந்தாள்அண்ணன்புரளும் கூடந் தன்னில்.

" மைத்துனனை நானிழந்தேன் தங்கை யே! என்
மன்னன்எனைத் தள்ளிவிட்டான் அதுபோ கட்டும்;
செத்தானை இனிக்காண முடிவதுண்டோ?
திருநாட்டை நீஇழந்து, துணை இழந்து,
கைத்து¡ண்டிற் சிறுமீனாய்க் கலங்கு கின்ற
காட்சியினை நான்காண நேர்ந்த தேயோ!
வைத்திருந்தான் படைத்தலைவ னாக என்னை;
மைத்துனனை இகழ்ந்துரைத்தால் பொறுப்பே னோநான்?

கதிர்நாட்டைப் பிடிப்பதென வேழன் சொன்னான்
கடிந்துரைத்தேன்; மறுநொடியில் அமைச்ச னுக்குப்
புதுத்தலைமை தந்தேபின் படையெ ழுப்பிப்
பொன்னான கதிர்நாட்டின் மேல்வி டுத்தான்.
எதிர்பாராப் படைஎடுப்பை அறியீர் அன்றோ?
இதைக்கூற இங்குவந்தேன்; வருவ தற்குள்
சிதைத்தானே கதிர்நாட்டின் உரிமை தன்னைத்
தீர்த்தானே மைத்துனனை, அன்பு வேந்தை!

உயிர்போன்றாய்! உடன்பிறப்பே! என்றன் ஆவி
உடலைவிட்டுப் போவதுமெய்! வைய கத்தில்
துயர்தாங்க அட்டியில்லை; எனைஇ கழ்ந்து
சொல்லுமோர் சொல்லையும்நான் பொறுப்ப துண்டோ!
முயல்போன்றான் நரிக்கண்ணன் என்றா லுந்தன்,
முத்தான தங்கையவள் வாழ்க்கைப் பட்ட
வயவேந்தன் கதிர்நாட்டான், நரிக்கண் ணற்கு
மைத்துனன்என் றுரைத்தபெரு மைபோ யிற்றே!"


இயல் 11

நரிக்கண்ணன் வஞ்சம் பேசுகையில், இவனிடம் கரிய
உடை பெற்ற ஆள் வந்தான். அவள் அவனை எதிர்க்கிறாள்.
அவன், மன்னனைக் கொன்றவன் இவனே என்று
நரிக்கண்ணனைக் காட்டி விடுகிறான். அதற்குள் நரிக்கண்ணன்
அரசியைக் கொன்றான்.

எனஉரைத்தான்; துடித்தழுதான். மேலும் பேச்சை
எடுக்கையிலே, கரியஉடை போர்த்த ஓர்ஆள்,
"இனிஎன்ன செய்வ" தென நரியைக் கேட்டே
எதிர்வந்தான். அவள்கண்டாள். வாளைத் து¡க்கிப்
"புனையுந்தார் மன்னனின்பின் புறத்தில் ஈட்டி
புகுத்தியவன் நீதானா" என்றாள். "இல்லை
எனக்கிந்தக் கரியஉடை இவரே தந்தார்
ஈயுமுன்னே மன்னவர்மேல் ஈட்டிஎய்தார்."

என்றுரைத்தான்! அதேநொடியில் நரிக்கண்ணன்தான்
இடையினிலே மறைத்திருந்த வாளெ டுத்து
நின்றிருந்த உடன்பிறப்பை, அரசி தன்னை
நிலத்தினிலே விழுமாறு வெட்டிச் சாய்த்தே
"ஒன்றுக்கும் அஞ்சாத என்னை இந்நாள்
உயிர்நடுங்க வைத்தவளை ஒழித்தேன்" என்று
நின்றுபெரு முச்சுவிட்டான்! எங்கே அந்த
நேரிழையாள் அன்னம்என உள்ளே சென்றான்.

இயல் 12

நரிக்கண்ணன் அன்னத்தைத் தேடி உள்ளே செல்ல,
அங்கிருந்த ஆள் நடந்ததைத் தன் வேழ நாட்டு
மன்னனிடம் சென்று கூறினான். மன்னன்
வியப்புறுகின்றான்.

கரியஉடை போர்த்துவந்த காலாள் சென்று
கண்டவற்றை அரசனிடம் நன்று சொன்னான்!
பெருவாளால், தன்கையால் உடன்பி றந்த
பெண்ணாளைக் கொன்றானா? என்று மன்னன்
உருகினான். மக்களிடை மகனாய் வாழ
ஒண்ணாத கொடுவிலங்கை இந்நாள் மட்டும்
தெரியாதேன் வைத்திருந்தேன் அரண்ம னைக்குள்!
தீருவதெந் நாள்இந்தப் பழிதான் என்றான்.

அரசனிது கூறுங்கால் அங்கி ருந்த
அழிவொன்றே தொழிலான மறவர் தாமும்
இரக்கமுற லானார்கள்! நரைத்த தாடி
இளைத்தஉடல், களைத்தவிழிக் கிழவன்," வேந்தே
கரிப்பின்றேல் இனிப்பருமை யாரே காண்பார்?
காயின்றேல் கனியருமை யாரே காண்பார்?
நரிக்கண்ணர் இலைஎனில்நும் அருமை தன்னை
நானிலந்தான், அறிந்திடுமோ நவில்க." என்றான்.

இயல் 13

அன்னத்தைக் காணாது திரியும் நரிக்கண்ணன்
எதிரில் தேரோட்டியான குப்பன் வந்தான்.

அன்னத்தை அரண்மனையில் காண வில்லை!
ஆத்தாவைக் காணவில்லை! நரிக்கண் ணன்தான்
என்னத்தைச் செய்வதென ஏங்கி நின்றான்;
எதிரினிலே தேரோட்டும் குப்பன் வந்தான்.
"பொன்னான பேழையினைப் பெற்றா யோ?என்
புகழுக்கும் ஆட்சிக்கும் ஆணி வேரை
உன்னிடத்தில் தந்துள்ளேன்; அதனைக் காப்பாய்
ஒருத்தரிடம் சொல்லாதே!" என்று ரைத்தான்.

"நானறியேன் பேழையினை!" எனறான் குப்பன்.
நடுங்கினான் நரிக்கண்ணன் "ஐயோ ஐயோ
போனதோ? இங்கிருந்த ஆளி டத்தில்
போயிதனைக் குப்பனிடம் கொடுஎன் றேனே,
ஊனமிலா நம்மறவர் போலே அன்றோ
உடையுடுத்து நின்றிருந்தான்; ஏய்த்தான் போலும்.
ஏனிந்தப் பிழைசெய்தேன்? என்வாழ் வுக்கே
இடையூறு சூழ்ந்தேனே!" எனத்து டித்தே.

அன்னத்தின் ஆவியினை அகற்ற வேண்டும்;
ஆவிநிகர் பேழையினை அடைதல் வேண்டும்;
என்னுமொரு கருத்தோடும் அரண்ம னைக்குள்
இட்டிருந்த ஓர்தவிசில் சென்றுட் கார்ந்தான்.
மன்னவனை ஏமாற்றிக் கதிர்நாட் டாட்சி
வாங்குவதில் சிறிதேனும் தொல்லை யில்லை;
அன்னத்தை ஆத்தாவைத் தேட வேண்டும்;
அரும்பேழை வேண்டும்எனப் பெருந்துன் புற்றான்.

இயல் 14

அவன் எதிர் வேழநாட்டு மன்னன் வருகிறான்.
அவனிடம் தொடங்குகிறான் பொய்மூட்டைகளை
நரிக்கண்ணன்.

ஆத்தாவை, அன்னத்தைப் பேழை தன்னை
அடையாளப் படிஎங்கும் படையா ளர்கள்
போய்த்தேட வகைசெய்து கொண்டி ருந்த
பொல்லாத நரியானின் எதிரில், மன்னன்
கோத்தான முத்துலவு மார்பி னோடு
குன்றுநடை கொண்டதுபோல் சென்று நின்றான்!
சாய்த்தானே நரிக்கண்ணன் மன்ன வன்பால்
சரசரெனச் சொற்பெருக்கை, எழுந்து நின்றே.

"நாளும்எனைக் காப்பாற்றி ஆளாக் கிப்பின்
நாற்படைக்கும் தலைவனென ஏற்ப டுத்திக்
கோளும்பொய் சூதுமிலான் எனஉணர்ந்து
கொண்டு,பெருந் தொண்டெல்லாம் எனக்கே தந்து
நீளிஎனும் மன்னனைநான் போரில் வென்ற
நினைவாகப் பரிசீந்த கனியே! உன்றன்
தோளைஇகழ்ந் தாளிவள்;என் வாளால் வெட்டித்
தொடுகழற்குக் காணிக்கை இட்டேன் காண்க.

'வஞ்சகத்தால் கதிரைவேல் மன்னன் தன்னை
மறவேந்தே நீகொன்றாய்' என்றுதீய
நெஞ்சத்தால் நினைத்தாளே! 'நின்தோள், மானம்
நீத்ததோள்' என்றாளே! ஐயோ! அன்னாள்
கொஞ்சத்தால் மாண்டாளே, நாள டைவில்
கொடுவாளால் சிறிதுசிறி தாய ருத்துக்
கெஞ்சத்தான் வைத்தேனா! உன்பால் அன்பு
கெட்டேனே கெட்டேனே கெட்டேன் ஐயா.

'உடன்பிறந்தேன்' என்றுரைத்தாள். ஆமாம் என்றேன்
'உன்னரசை இந்நொடியில் சூழ்ச்சி யாலே
மடியும்வகை செய்துவிடு; முடியும் உன்னால்!
மன்னவனைப் பழிவாங்கி விட்டே இந்தக்
கடல்நிகர்த்த கதிர்நாட்டை ஆள்' என் றாள்என்
காதுபெற்ற துன்பத்தை என்ன சொல்வேன்!
கொடியாளின் உடன்பிறந்த பழியுந் தாளேன்
கொடைமன்னா அருள்புரிக தருக வாளை.

நல்லாரின்பெருநிலையும் இந்த வையம்!
நான்தீயா ளொடுபிறந்த தாலே தீயன்!
எல்லாரும் போலேநான் இன்னும் இங்கே
இருக்கின்றேன் சாகாமல்! ஒன்று மட்டும்
சொல்லுவேன் நானண்டி வாழ்ந்தி ருந்த
து¡யோய்நின் புகழுக்கும் அறத்தி னுக்கும்
முல்லைமுனை அளவென்னால் பழிநேராமல்
முழுதுண்மை யாய்நடந்தேன் இதன்பொருட்டு

நான்செத்த பின்அடையும் வானாட் டின்கண்
நானு¡று சிற்று¡ர்கொள் ஒருபேரூரும்
தேனு¡றும் சோலைசூழ் அப்பே ருரில்
செப்பரிய அரண்மனையும் அரண்ம னைக்குள்
பால்நேரில் காய்ச்சி, அதில் சீனி இட்டுப்
பத்துவகைச் சிற்றுணவும் ஒத்த பெண்ணும்
ஊனின்பம் நுகர்கின்ற அறைஇ ருந்தால்
ஒருத்தருக்கும் இல்லைஅது எனக்கே" என்றான்.

இயல் 15

நரிக்கண்ணன் பேச்சை நம்பிவிட்ட வேழ மன்னன்
நரிக் கண்ணனுக்கு இரங்கினான். இந்தநாடு
உன்னுடையமுன்னோருடையது என்பதற்குப்
பட்டயம் உண்டா என்றான்.

அரசனுரைத் திடுகின்றான் "அப்ப னேஉன்
அன்பினையும் பண்பிணையும் அறியார் யாவர்?
ஒருகுலையில் ஒருகாயில் தீமை காணில்
உயர்காய்கள் அத்தனையும் வெறுப்ப துண்டோ?
அரசியவள் தீயவள்தான்; உடன்பி றந்த
அறம்பிழையா மறவன்நீ! அழுதல் வேண்டாம்.
நரிக்கண்ணா பழநாளில் இதுஉன் பாட்டன்
நாடென்றாய்! அதற்குள்ள சான்று முண்டோ?

அதுவிருந்தால் காட்டுகநீ! இந்த நாட்டின்
ஆட்சியினை உனக்களித்து விடுவேன்" என்றான்.
"பதிவிருந்தால் ஏனுனைநான் நத்த வேண்டும்?
பாட்டனுக்குப் பாட்டனாம் பறைக்கண் ணற்குக்
குதிரைதிரை கொண்டநெடு முடியான் என்னும்
கொடுநாட்டு மன்னன்அளித் தான்இந் நாட்டைப்
பதினா யிரம்பேரை வென்ற தாலே
பரிசாகத் தந்ததன்றி வேறொன் றில்லை!

அந்நாளில் மன்னவனால் கொடுக்கப் பெற்ற
அருஞ்செப்புப் பட்டயத்தைக் கதிரை வேலன்
முன்னோனாம் முத்தப்பன் மறைத்த தோடு
மூன்றாநாள் து¡ங்கையிலே கொலையும் செய்தான்!
தன்னிடத்தில் படையிருந்த தாலே அன்றோ
சழக்கனவன் குடிகளிடம் தப்பி வாழ்ந்தான்?
என்னையுமிக் கதிர்நாட்டான் விட்ட தில்லை;
இங்கிரா தேஎன்றான் அங்கு வந்தேன்.

இந்நாட்டை நானாள வேண்டு மென்ற
எண்ணமே எனக்கில்லை; என்றன் தந்தை
அந்நாளில் சாகுங்கால் எனைஅ ழைத்தே
அங்கையினைத் தன்மார்பில் அழுத்தி, 'அப்பா
உன்னைநான் ஓருறுதி கேட்கின் றேன்நீ
ஒப்பிடுக, உன்னாளில் வேழ நாட்டின்
மன்னவரின் அருள்பெற்றுக் கதிர்நாட் டுக்கு
மன்னவனாய் இரு! நமது மானங் காப்பாய்.'

எனக்கூறி உயிர்நீத்தான்; அதனா லன்றோ
எழில்வேழ நாட்டினில்நான் அடைந்தி ருக்கும்
தனிப்பெருமை, தனிமகிழ்ச்சி இவற்றை யெல்லாம்
தவிர்ப்பதற்கும் துணிகின்றேன்; ஐய னேநீ
எனைத்தமிழில் 'படைத்தலைவா' என்ற ழைக்கும்
இன்பத்துக் கீடாக இந்த வையம்
தனைத்தரினும் ஒப்பேனே! ஒருசொல் சொல்க;
'தாளடைந்த நரிக்கண்ணன் ஆள்க' என்றே!

வணங்குகின்றேன் எனக்கூறி வணங்கி நிற்க
மன்னவனும் மனமிரங்கி "அஞ்சேல்! அஞ்சேல்!
இணங்ககின்றேன். நீ ஆள்க" எனஉ ரைத்தான்
"இன்றைக்கே முடிசூட்டிக் கொள்க" என்றான்!
பிணங்குவித்தும் மைத்துனனை உடன் பிறப்பைப்
பெருவஞ்ச கத்தாலே சாகச் செய்தும்
அணியுமொரு மணிமுடிக்கே நரிக்கண் ணன்தான்
அன்பில்லாத் தன்னுளத்தால்