|
1. நெஞ்சு பதைக்கும் நிலை
கரும்புதந்த தீஞ்சாறே, கனிதந்த நறுஞ்சுளையே, கவின்செய் முல்லை
அரும்புதந்த வெண்ணகையே அணிதந்த செந்தமிழே அன்பே, கட்டி
இரும்புதந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலை ஈட ழித்து
வரும்புதுமை நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்சொல்ல வாய்ப தைக்கும். 1
எடுத்துமகிழ் இளங்குழந்தாய், இசைத்துமகிழ் நல்யாழே, இங்குள் ளோர்வாய்
மடுத்துமகிழ் நறுந்தேனே, வரைந்துமகிழ் ஓவியமே, அன்பே, வன்பு
தொடுத்துமகிழ் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைத் தோன்றா வண்ணம்
தடுத்துவரல் நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்சாற்ற வாய்ப தைக்கும். 2
பண்டுவந்த செழும்பொருளே, பார்அடர்ந்த இருட்கடலில் படிந்த மக்கள்
கண்டுவந்த திருவிளக்கே, களிப்பருளும் செந்தமிழே, அன்பே, வாழ்வில்
தொண்டுவந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைத் துளிர்க்கா வண்ணம்
உண்டுவரல் நினைக்கையிலே உளம்பதைக்கும் சொல்வதெனில் வாய்ப தைக்கும். 3
உடலியக்கும் நல்லுயிரே, உயிரியக்கும் நுண்கலையே, மக்கள் வாழ்வாம்
கடலியக்கும் சுவைப்பாட்டே, கண்ணான செந்தமிழே, அன்பே, நாட்டில்
கெடலியக்கும் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைக் கெடுக்கப் பாடு
படல்தன்னை நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்பகர வாய்ப தைக்கும். 4
வையத்தின் பழநிலவே, வாழ்வுக்கோர் புத்துணர்வே, மயிலே, மேலோர்
ஐயத்திற் கறிவொளியே, ஆடல்தரும் செந்தமிழே, அன்பே, தீமை
செய்யத்தான் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைத் தீர்க்க எண்ணும்
மெய்யைத்தான் நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்விளக்க வாய்ப தைக்கும். 5
2. இருப்பதைவிட இறப்பது நன்று
வாணிகர்க்கும் தமிழென்றால் வெறுப்புண்டோ? அரசியல்சீர் வாய்க்கப் பெற்றோர்
ஆணிகர்த்த பேடிகளோ? அரும்புலவர் ஊமைகளோ? இல்ல றத்தைப்
பேணுமற்ற யாவருமே உணர்வற்றுப் போனாரோ? பெருவாழ் வுக்கோர்
ஏணிபெற்றும் ஏறாத தமிழர்உயிர் வாழ்வதிலும் இறத்தல் நன்றே. 6
மிகுகோவில் அறத்தலைவர், அறநிலையக் காப்பாளர், விழாவெ டுப்போர்,
தகுமாறு மணம்புரிவோர், கல்விதரும் கணக்காயர், தம்மா ணாக்கர்,
நகுமாறு நந்தமிழை நலிவுசெய்யும் தீயர்களோ? நல்வாழ் வுக்கோர்
புகும்ஆறு புறக்கணித்தும் தமிழர்உயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 7
மகிழ்ச்சிசெய வருங்கூத்தர், மாத்தமிழை மாய்ப்பதுண்டோ? வாய்ப்பாட் டாளர்,
இகழ்ச்சியுற நடப்பதுண்டோ? இசைப்பாடல் ஆக்குபவர் இழிவேன் ஏற்றார்?
நகச்சிலசொற் பொழிவாளர் நாணற்றுப் போயினரோ? வாழ்வுக் கான
புகழ்ச்சியினைப் போக்கடித்தும் தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 8
கூற்றமென வாழ்வதுவோ தமிழுக்கே ஏடெழுதும் கூட்டம்? தீமை
மாற்றவரும் அச்சகத்தார் வகைமறந்து போனாரோ? சொல்லாக் கத்தார்
தூற்றுமொழி ஏன்சுமந்தார்? துண்டறிக்கை யாளருமோ தீயர்? வாழ்வில்
ஏற்றமுற எண்ணாத தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 9
நல்லஅரும் பொருளுடையார் நந்தமிழ்க்கோ பகையாவார்? நாட்டில் ஆணை
சொல்லவரும் அரசியலார் செந்தமிழ்நா டிதுவென்றும் தெரியார் போலும்!
வல்லவரும் பெரியநிலை வாய்த்தவரும் என்செய்தார்? இன்ப வாழ்வின்
எல்லையறிந் தும்திருந்தாத் தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 10
3. வரிப்புலியே, தமிழ்காக்க எழுந்திரு!
ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்!
கண்டறிவாய்! எழுந்திரு நீ! இளந்தமிழா, கண்விழிப்பாய்! இறந்தொ ழிந்த
பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும்நீ படைப்பாய்! இந்நாள்
தொண்டுசெய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெ ழுந்தே! 11
உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற வெற்றியெலாம் உன்றன் வெற்றி!
அயராதே! எழுந்திரு நீ! இளந்தமிழா, அறஞ்செய்வாய்! நாம டைந்த
துயரத்தைப் பழிதன்னை வாழ்வினிலோர் தாழ்மையினைத் துடைப்பாய். இந்நாள்
செயல்செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் சீறி வந்தே. 12
வாழியநீ! தமிழ்த்தாய்க்கு வரும்பெருமை உன்பெருமை! வயிற்றுக் கூற்றக்
கூழின்றி வாடுகின்றார்; எழுந்திருநீ இளந்தமிழா! குறைத விர்க்க
ஆழிநிகர் படைசேர்ப்பாய்! பொருள்சேர்ப்பாய்! இன்பத்தை ஆக்கு விப்பாய்!
ஊழியம்செய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் உணர்ச்சி கொண்டே. 13
உணர்ந்திடுக தமிழ்த்தாய்க்கு வரும்தீமை உனக்குவரும் தீமை அன்றோ!
பிணிநீக்க எழுந்திரு நீ இளந்தமிழா, வரிப்புலியே, பிற்றை நாளுக்
கணிசெய்யும் இலக்கியம்செய்! அறத்தைச்செய்! விடுதலைகொள் அழகு நாட்டில்!
பணிசெய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் பழநாட் டானே. 14
எதுசெய்ய நாட்டுக்கே எனத்துடித்த சிங்கமே! இன்றே, இன்னே,
புதுநாளை உண்டாக்கித் தமிழ்காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய் இங்கே
அதிர்ந்தெழுக! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் அழகு காப்பாய்!
இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. 15
4.மங்கையர் முதியோர் எழுக!
ஒருவானில் பன்னிலவாய் உயர்தமிழப்பெண்களெலாம் எழுக! உங்கள்
திருவான செந்தமிழின் சிறுமையினைத் தீர்ப்பதென எழுக! நீவிர்,
பெருமானம் காப்பதற்கு வாரீரேல் உங்கள்நுதற் பிறையே நாணும்!
மறுமலர்வாய்த் தாமரையும் கனியுதடும், நன்னெஞ்சும் வாட்டம் எய்தும்! 16
நகர்நோக்கிப் பசுந்தோகை நாடகத்து மாமயில்கள் நண்ணி யாங்குப்
பகர்கின்ற செந்தமிழின் பழிநீக்கப் பெண்களெலாம் பறந்து வாரீர்!
மிகுமானம் காப்பதற்கு வாரீரேல் வெண்ணிலவு முகஞ் சுருங்கும்
மகிழ்வான மலர்க்கண்ணம் வாய்மையுளம் வாட்டமுறும் மலர்க்கண் நாணும். 17
தண்டூன்றும் முதியோரே! தமிழ்த்தொண்டென் றால்இளமை தனை எய் தீரோ?
வண்டூன்றும் சிற்றடியால் மண்டுநறும் பொடிசிதறும் பொதிகை தன்னில்
பண்டூன்றும் திருவடியால் பச்சைமயில் போல்வந்து தமிழர்க் காவி
கொண்டூன்றி வருந்தமிழ்த்தாய் கொண்டகுறை தவிர்ப்பதற்குக் குதித்து வாரீர்! 18
பிரம்புவளை மெய்யுடையீர் ஆருயிரில் வாரியிட்டுப் பிசைந்த தான
உரம்பெய்த செந்தமிழுக் கொன்றிங்கு நேர்ந்ததென உரைக்கக் கேட்டால்
நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாகி நண்ணி டீரோ!
இரங்குநிலை கொண்டதமிழ் ஏற்றகுறை தவிர்த்திடநீர் எழுச்சி கொள்வீர். 19
அன்னையினை எதிர்த்தார்க்கும் அவள்மேன்மை மறந்தார்க்கும் அயர்ந்த வர்க்கும்
மின்னைவிழி உயர்ந்ததுபோல் மெய்யுயிரைப் பெற்றதுபோல் தமிழ்ச்சாப் பாடு
தன்னையுணர் விப்பதற்குச் சாரைச்சிற் றெறும்பென்னத் தமிழ் நாட்டீரே,
முன்னைவைத்த காலைப்பின் வையாமே வரிசையுற முடுகு வீரே! 20
5. வாணிகர்
வாணிகர்,தம் முகவரியை வரைகின்ற பலகையில்,ஆங் கிலமா வேண்டும்?
'மாணுயர்ந்த செந்தமிழால் வரைக' என அன்னவர்க்குச் சொல்ல வேண்டும்!
ஆணிவிற்போன் முதலாக அணிவிற்போன் ஈராக அனைவர் போக்கும்
நாணமற்ற தல்லாமல் நந்தமிழின் நலம்காக்கும் செய்கையாமோ? 21
உணவுதரு விடுதிதனைக் 'கிளப்'பெனவேண் டும்போலும்! உயர்ந்த பட்டுத்
துணிக்கடைக்கு 'சில்கு"¡ப்' எனும்பலகை தொங்குவதால் சிறப்புப் போலும்!
மணக்கவ ரும் தென்றலிலே குளிராஇல்லை? தோப்பில் நிழலா இல்லை?
தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தா னில்லை! 22
'பவன்' 'மண்டல்' முதலியன இனியேனும் தமிழகத்தில் பயிலா வண்ணம்
அவண்சென்று முழங்கிடுவீர்! ஆங்கிலச்சொல் இந்திமொழி வடசொல் யாவும்
இவண்தமிழிற் கலப்பதுண்டோ 'பிராம்மணர் கள்உண்ணும் இடம்' இப் பேச்சில்
உவப்புண்டோ தமிழ்மானம் ஒழிந்திடுதே ஐயகோ உணர்வீர் நன்றே . 23
அறிவிப்புப் பலகையெல்லாம் அருந்தமிழ்ச்சொல் ஆக்குவதே அன்றி, அச்சொல்
குறைவற்ற தொடராகக் குற்றமற்ற சொல்லாக அமையு மாயின்
மறுவற்றுத் திகழாளோ செந்தமிழ்த்தாய்? தமிழ்மக்கள் மகிழ்ந்தி டாரோ?
குறியுற்ற மறவர்களே! இப்பணியை முடிப்பதற்கோர் கூட்டம் வேண்டும். 24
பேச்சாலும் எழுத்தாலும் பாட்டாலும் கூத்தாலும் பிறர் உவக்க
ஓச்சுகவே மணிமுரசு! வீதியெல்லாம் வரிசையுற உலவா நிற்பீர்!
ஏச்சாலும் எதிர்ப்பாலும் வருகின்ற இன்னலுக்குள் இன்ப வெள்ளம்
பாய்ச்சாதோ பொதுத்தொண்டு? பைந்தமிழ்க்குச் செயும்தொண்டு பருக வாரீர். 25
6.. அரசியல்சீர் வாய்ந்தார் ( 1 )
கல்லூரித்தலைவரை நான் கேட்கின்றேன் கனிதமிழின் பேரைச் சொன்னால்
சொல்லூறிப் போகாதோ! வாயூறிப் போகாதோ! தூய் தமிழ்க்கு
வல்லூறாய் வாய்த்தீரோ? வளம்செய்யும் எண்ணமெனில், நீர் பிறந்த
நல்லூரின் நன்மொழியால் அல்லாது நடந்திடுமோ நவில்வீர் இன்றே. 26
வரிப்பணத்தை வழங்கிடுவோர் வாய்ப்பளிக்க முந்திடுவோர் தமிழர் அன்றோ?
இருப்புறுநும் அலுவலுக்கும் யாரையா வேர்? தமிழை மறப்ப துண்டோ?
நரிப்பிணத்தை நரியுந்தின் னாதென்ப தறியீரோ? நம்மா னத்தை
எரிப்பதற்குத் திருவுளமோ? எழிற்பள்ளிக் கணக்காயர் தலைமையோரே. 27
தமிழ்நாட்டின் உப்பைத்தின் றீரன்றோ கணக்காயர் தந்தை மாரே!
தமிழ்நாட்டில் தமிழர்களின் தன்னுணர்வு நாட்டுவதைத் தவிர்ப்பீ ராயின்
உமிழாதோ, வருத்தாதோ உம்மையே உம்மருமை உள்ளச் சான்றே?
அமுதூட்ட நஞ்சூட்டி அகமகிழும் தாயுண்டோ அருமைச் சேய்க்கே? 28
படிப்பாரின் தமிழ்ச்சுவடி பரிந்தாயும் அரசியலார் குழுவி னோரே,
தடிப்பாகிப் போவதுண்டோ உம்முள்ளம்? தமிழென்றும் வடசொல் என்றும்
வடிப்பாக்கி நோக்கிடவும் மாட்டீரோ? செந்தமிழின் பகைவரின் வால்
பிடிப்பாரின் துணையில்இனும் பிழைப்பீரோ, மறவர்தமிழ்ப் பெரிய நாட்டில்? 29
தமிழ்நடையில் நயம்வேண்டின் தமிழ்நாட்டின் நடைமுறையைத் தமிழ்நாட் டாரை
அமையவரை தல்வேண்டும்! அவ்வாற்றால் அமைவுற்ற சுவடி தன்னை
உமைமறந்து மறுக்காதீர் உமியைப்போய் ஒப்பாதீர் இன்னும் கேளீர்
தமிழ்தழுவாச் சுவடிதனை தணல்தழுவா திராதினிமேல் தமிழ்நா டெங்கும். 30
7. அரசியல்சீர் வாய்ந்தார் ( 2 )
தெலுங்குதமிழ் நாட்டினிலேன்? செத்தவட மொழிக்கிங்கே என்ன ஆக்கம்?
இலங்கும் இசைப் பாட்டுக்கள் பிறமொழியில் ஏற்படுத்த இசைய லாமோ?
நலங்கண்டீர் தமிழ்மொழியால் நற்றமிழை ஈடழித்தல் நன்றோ? சின்ன
விலங்கதுதான் சோறிட்டான் மேற்காட்டும் நன்றியைநீர் மேற்கொள் ளீரோ? 31
பொதுமையிலே கிடைத்திட்ட செல்வாக்கை இனநலத்துக் காக்கு வோரை
இதுவரைக்கும் மன்னித்த எழில்தமிழர் இனிப்பொறுப்பார் என்ப தில்லை!
குதிகாலும் மேற்செல்லும் அடுத்தபடி கீழேதான் வந்து சேரும்.
அதுவியற்கை! மலைக்காதீர்! அறிவுநாள் இது! கொடுமை அழிந்தே தீரும் 32
அரசியலார் அறிக்கையிலும் சுவடியிலும் தமிழ்ப்பெருமை அழித்தி டக்கை
வரிசையெல்லாம் காட்டுவதோ? வடமொழியும் பிழைத்தமிழும் பெருகி விட்டால்
வருநாளில் தமிழழியும் வடமொழிமே லோங்குமெனும் கருத்தோ? நாட்டில்
திருடர்களை வளரவிடும் ஏற்பாடோ?செல்லுபடி ஆகா திங்கே. 33
திருடர்கள் f¡க்கிரதைஇதைத் திருடருண்டு விழிப்போடி ருங்கள் என்றால்
வருந்தீமை என்ன?நியா யSதலத்தை அறமன்றம் எனில்வாய்க் காதோ?
அருவருக்கும் நெஞ்சுடையார் அருவருக்கும் செயலுடையார் அன்றோ இந்தக்
கருவறுக்கும் வினைசெய்வார். கலப்பாலில் துளிநஞ்சும் கலத்தல் வேண்டாம். 34
அரசியலார் அலுவலகம் அறமன்றம் இங்கெல்லாம் அலுவல் பெற்றீர்
உரையனைத்தும் ஆங்கிலமோ? உணர்விலையோ? ஒழுக்கந்தான் இதுவென் பீரோ?
வரும்நாட்டுப் புறத்தவரின் தமிழ்ப்பேச்சும் பிடிப்பதில்லை வண்ட மிழ்சேர்
திருநாட்டிற் பிறந்தோமென் றெண்ணுவதும் இல்லைஇனித் திருந்து வீரே. 35
8. அரசியல்சீர் வாய்ந்தார் ( 3 )
தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும்.
தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த் தமிழ்நாட்டில் வாராது தடுத்தல் வேண்டும்.
நமைவளர்ப்பான் நந்தமிழை வளர்ப்பவனாம்! தமிழ்அல்லால் நம்முன் னேற்றம்
அமையாது. சிறிதும்இதில் ஐயமில்லை, ஐயமில்லை அறிந்து கொண்டோம். 36
தமிழெங்கே! தமிழன்நிலை என்னஎனத் தாமறியாத் தமிழர் என்பார்
தமிழர்நலம் காப்பவராய் அரசியலின் சார்பாக வரமு யன்றால்
இமைப்போதும் தாழ்க்காமல் எவ்வகையும் கிளர்ந்தெழுதல் வேண்டும்! நம்மில்
அமைவாக ஆயிரம்பேர் அறிஞர்உள்ளார் எனமுரசம் ஆர்த்துச் சொல்வோம். 37
நகராட்சி சிற்றூரின் நல்லாட்சி மாவட்ட ஆட்சி என்று
புகல்கின்ற பலஆட்சிக் கழகங்கள் எவற்றினுமே புகநி னைப்பார்
தகுபுலமை குறிக்கின்ற சான்றுதர வேண்டுமெனச் சட்டம் செய்தால்
அகலுமன்றோ தமிழ்நாட்டின் அல்லலெலாம்? அல்லாக்கால் அமைதி யுண்டோ? 38
தமிழறியான் தமிழர்நிலை தமிழர்நெறி தமிழர்களின் தேவை, வாழ்வு
தமையறிதல் உண்டோ?எந் நாளுமில்லை! தமிழறியான் சுவையே காணான்!
சுமைசுமையாய் அரசியல்சீர் சுமந்தவர்கள் இதுவரைக்கும் சொன்ன துண்டோ
தமிழ்க்கல்வி தமிழ்நாட்டில் கட்டாயம் என்பதொரு சட்டம் செய்ய? 39
ஆங்கிலநூல் அறிவுக்குச் சான்றிருந்தால் அதுபோதும் அலுவல் பார்க்க!
ஈங்குள்ள தமிழர்நெறி அவர்க்கென்ன தெரிந்திருக்கும்? இதுவு மன்றி,
மாங்காட்டுச் செவிடனெதிர் வடிகட்டி ஊமையரை வைத்த தைப்போல்
தீங்கற்ற தமிழறியான் செந்தமிழ்நாட் டலுவலின்மேற் செல்ல லாமோ? 40
9. புலவர் ( 1 )
தமிழ்ப்புலவர் ஒன்றுபடும் நன்னாளே தமிழர்க்குப் பொன்னா ளாகும்!
தமிழ்ப்பெருநூல் ஒன்றேனும் ஒற்றுமையைத் தடைசெய்யக் கண்ட துண்டோ?
தமிழ்ப்புலவர் தமக்குள்ளே மாறுபட்ட தன்மையினால் இந்நாள் மட்டும்
தமிழ்ப்பெருநா டடைந்துள்ள தீமையினைத் தமிழறிஞர் அறிகி லாரோ? 41
ஒல்காதபெரும் புகழ்த்தொல் காப்பியமும், நன்னூலும் தமிழர்க் கெல்லாம்
நல்கரிய நன்மையெலாம் நல்கினஎன் றால்நாமும் நன்றி சொல்வோம்.
செல்பலநூற் றாண்டுசெல அவ்விருநூல் திருவடியில் புதிய நூற்கள்
பல்காவேல் இருநூற்கும் பழியே!நம் புலவர்க்கும் பழியே யன்றோ? 42
தனித்தியங்கத் தக்கதெனத் தமிழ்பற்றித் தமிழ்ப்புலவர் சாற்று கின்றார்.
இனித்திடும்அவ் விருநூலில் வடமொழிஏன்? வடஎழுத்துக் கொழுங்கு தான்ஏன்?
தனித்தமிழில் இந்நாட்டுத் தக்கபுதுக் காப்பியம்,நன் னூல்இ யற்ற
நினைப்பாரேல் நம்புலவர் நிலவாவோ ஆயிரம்நூல் தமிழ கத்தே. 43
முதுமைபெறு சமயமெனும் களர்நிலத்தில் நட்டதமிழ்ப் பெருநூல் எல்லாம்
இதுவரைக்கும் என்னபயன் தந்ததென எண்ணுகையில் நான்கு கோடிப்
பொதுவான தமிழரிலே பொன்னான தமிழ்வெறுத்தார் பெரும்பா லோராம்!
புதுநூற்கள் புதுக்கருத்தால் பொதுவகையால் தரவேண்டும் புலவ ரெல்லாம். 44
சோற்றுக்கென் றொறுபுலவர் தமிழ்எதிர்ப்பார் அடிவீழ்வார்! தொகையாம் செல்வப்
பேற்றுக்கென் றொருபுலவர் சாSதிரமும் தமிழ்என்றே பேசி நிற்பார்!
நேற்றுச்சென் றார்நெறியே நாம்செல்வோம் எனஒருவர் நிகழ்த்தா நிற்பார்!
காற்றிற்போம் பதராகக் காட்சியளிக் கின்றார்கள் புலவர் சில்லோர்! 45
10. புலவர் ( 2 )
சீவல்லபர் திருவள் ளுவரானார் என்றொருவர் செப்ப லுற்றார்!
நாவன்மை என்பதுவும் செந்தமிழை நலிப்பதற்கோ? நாணி லாரோ?
பாவளிக்கும் சுவைமுழுதும் பருகிவிட்ட தாயுரைக்கும் ஒருவர் சொல்வார்,
கோவையிட்ட கம்பனது செய்யுலிலே முக்காலும் கோணல் என்றே! 46
கம்பனார் பதினோரா யிரம்பாட்டில் முக்காலும் கழித்துப் போட்டு
நம்பினால் நம்புங்கள் இவைதாம்கம் பன்செய்யுள் எனஅச் சிட்டு
வெம்புமா றளிக்கையிலும் மேவாத செயல்இதனைச் செய்ய இந்தக்
கொம்பன்யார் எனக்கேட்க ஆளில்லையா புலவர் கூட்டந் தன்னில்? 47
'வாட்டடங்கண்' 'கற்றரை'யை வாள்த்தடங்கண் கல்த்தரைஎன் றெழுதி முன்னைப்
பாட்டினிலே பெரும்பிழையைப் பல்குவிப்பா னுக்குமணிப் பண்டி தர்கள்
சாட்டைகொடுத் தறிக்கைவிடத் தாள்ஒன்றும் அற்றதுவோ! தமக்குச் சோறு
போட்டிடுவார் ஒப்புகிலார் எனுங்கருத்தோ மானமற்ற போக்குத் தானோ! 48
வடமொழியும் தெரியும்எனப் பொய்கூறி வடமொழிக்கு வாய்ப்பும் நல்க
வடமொழியா னைக்கொண்டு மொழிபெயர்த்து வருவார்க்கு வண்ட மிழ்ச்சீர்
கெடுவதிலே கவலையில்லை. ஆரியரை ஆதரித்துக் கிடப்ப தொன்றே
நடைமுறையில் நலன்விளைக்கும் என்னுமொரு மடமையினை நசுக்க வேண்டும். 49
அரசினரின் மொழியாக, அரசியலார் மொழியாக, அரசியல் சார்
வரிசையுறு சட்டமன்றின் மொழியாக, வையம்அறி மொழிய தாகத்
திருமலிந்த தமிழ்மொழிதான் ஆகும்வகை நம்புலவர் சேர்ந்து தொண்டு
புரிகஎன வேண்டுகின்றோம் பொழிகஎன வேண்டுகின்றோம் பொன்ம ழைதான்! 50
11. குடும்பத்தார்
அன்னைதந்த பால் ஒழுகும் குழந்தைவாய் தேன் ஒழுக அம்மா என்று
சொன்னதுவும் தமிழன்றோ! அக்குழந்தை செவியினிலே தோய்ந்த தான
பொன்மொழியும் தமிழன்றோ! புதிதுபுதி தாய்க்கண்ட பொருளி னோடு
மின்னியதும் தமிழன்றோ! விளையாட்டுக் கிளிப்பேச்சும் தமிழே யன்றோ! 51
வானத்து வெண்ணிலவும் வையத்தின் ஓவியமும் தரும் வியப்பைத்
தேனொக்கப் பொழிந்ததுவும் தமிழன்றோ! தெருவிலுறு மக்கள் தந்த
ஊனுக்குள் உணர்வேயும் தமிழன்றோ! வெளியேயும் உள்ளத் துள்ளும்
தான்நத்தும் அனைத்துமே காட்சிதரும் வாயிலெலாம் தமிழேயன்றோ! 52
திருமிக்க தமிழகத்தின் குடும்பத்தீர்! இல்லறத்தீர்! செந்த மிழ்க்கே
வருமிக்க தீமையினை எதிர்த்திடுவீர் நெஞ்சாலும் வாய்மெய் யாலும்!
பொருள்மிக்க தமிழ்மொழிக்குப் புரிந்திடுவீர் நற்றொண்டு; புரியீ ராயின்,
இருள்மிக்க தாகிவிடும் தமிழ்நாடும் தமிழர்களின் இனிய வாழ்வும்! 53
காக்கை 'கா' என்றுதனைக் காப்பாற்றச் சொல்லும்!ஒரு கருமு கில்தான்,
நோக்கியே 'கடமடா' என்றேதன் கடனுரைக்கும்! நுண்கண் கிள்ளை
வாய்க்கும்வகை 'அக்கா' என் றழைத்ததனால் வஞ்சத்துப் பூனை 'ஞாம் ஞாம்'
காக்கின்றோம் எனச்சொல்லக் கழுதைஅதை 'ஏ' என்று கடிந்து கூறும். 54
'கூ' எனவே வையத்தின் பேருரைத்துக் குயில் கூவும். 'வாழ் வாழ்' என்று
நாவினிக்க நாய்வாழ்த்தும். நற்சேவல் 'கோ' என்று வேந்தன் பேரைப்
பாவிசைத்தாற் போலிசைக்க, வரும்காற்றோ 'ஆம்' என்று பழிச்சும்! இங்கு
யாவினுமே தமிழல்லால் இயற்கைதரும் மொழிவேறொன் றில்லை யன்றோ? 55 |