New Register   -  Login     
Tamil Mozhi - Literatures
 - தமிழ்மொழி முகப்பு » இலக்கியங்கள் » இலக்கிய நூல்கள் » எட்டுத்தொகை »
சேனல்கள்
இணைப்புகள்

கலித்தொகை ( Kalithokai )

 
[1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15]
 
 

குறிப்பு :

150 கலிப்பக்களை கொண்டது.ஒவ்வொரு திணையைப் பற்றியும் ஒரு புலவராக ஐந்து புலவர்களால் பாடப்பட்டது.பாலை-பெருங்கடுங்கோ, குறிஞ்சி - கபிலர், மருதம் - மதுரை மருதனிளநாகனார், முல்லை - சோழன் நலுருத்திரன், நெய்தல் - நல்லத்துவனார்.

இந் நூலைத் தொகுத்தவர் நல்லத்துவனார். உரை எழுதியவர் ச்சினார்க்கினியர்.

நூல்

1. கடவுள்வாழ்த்து

ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து,
தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து,
கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி;
மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய்! கேள், இனி;
படு பறை பல இயம்பப், பல் உருவம் பெயர்த்து நீ, 5
கொடுகொட்டி ஆடுங்கால், கோடு உயர் அகல் அல்குல்,
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ?
மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து,
பண்டரங்கம் ஆடுங்கால், பணை எழில் அணை மென் தோள்,
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ? 10
கொலை உழுவைத் தோல் அசைஇக், கொன்றைத் தார் சுவல் புரள,
தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால்,
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?
என வாங்கு;
பாணியும், தூக்கும், சீரும், என்று இவை 15
மாண் இழை அரிவை காப்ப,
வாணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை, ஆடி.

சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ
அருளிய

பாலைக் கலி

2

தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக,
அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின்,
மடங்கல் போல், சினைஇ, மாயம் செய் அவுணரைக்
கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூஎயிலும்
உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின், 5
சீறு அருங் கணிச்சியோன் சினவலின் அவ் எயில்
ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து, இயங்குநர்
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை-
மறப்பு அருங் காதல் இவள் ஈண்டு ஒழிய,
இறப்பத் துணிந்தனிர், கேண்மின் மற்றைஇய! 10
தொலைவு ஆகி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என,
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
நிலைஇய கற்பினாள், நீ நீப்பின் வாழாதாள்,
முலை ஆகம் பிரியாமை பொருளாயின் அல்லதை;
இல் என, இரந்தார்க்கு ஒன்று ஈயாமை இழிவு என, 15
கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ-
தொல் இயல் வழாஅமைத் துணை எனப் புணர்ந்தவள்
புல் ஆகம் பிரியாமை பொருளாயின் அல்லதை;
இடன் இன்றி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என,
கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ- 20
வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள்
தட மென் தோள் பிரியாமை பொருளாயின் அல்லதை;
என, இவள்
புன் கண் கொண்டு இனையவும், பொருள்வயின் அகறல்
அன்பு அன்று, என்று யான் கூற, அன்புற்று, 25
காழ் வரை நில்லாக் கடுங் களிற்று ஒருத்தல்
யாழ் வரைத் தங்கியாங்குத், தாழ்பு, நின்
தொல் கவின் தொலைதல் அஞ்சி, என்
சொல் வரைத் தங்கினர், காதலோரே.

3

அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும்,
வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும்-
இறை நில்லா வளை ஓட, இதழ் சோர்பு பனி மல்க,
பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள்
விறல் நலன் இழப்பவும், வினை வேட்டாய்! கேஎள், இனி; 5
'உடை இவள் உயிர் வாழாள், நீ நீப்பின்' எனப், பல
இடைகொண்டு யாம் இரப்பவும், எம கொள்ளாய்ஆயினை;
கடைஇய ஆற்றிடை, நீர் நீத்த வறுஞ் சுனை,
அடையொடு வாடிய அணி மலர்-தகைப்பன;
'வல்லை நீ துறப்பாயேல், வகை வாடும் இவள்' என, 10
ஒல் ஆங்கு யாம் இரப்பவும், உணர்ந்தீயாய் ஆயினை;
செல்லு நீள் ஆற்றிடைச், சேர்ந்து எழுந்த மரம் வாட,
புல்லு விட்டு இறைஞ்சிய பூங்கொடி தகைப்பன;
'பிணிபு நீ விடல் சூழின், பிறழ்தரும் இவள்' எனப்,
பணிபு வந்து இரப்பவும், பல சூழ்வாய்ஆயினை; 15
துணிபு நீ செலக் கண்ட ஆற்றிடை, அம் மரத்து
அணி செல, வாடிய அம் தளிர்-தகைப்பன;
      எனவாங்கு
யாம் நிற் கூறவும் எம கொள்ளாய்ஆயினை;
ஆனாது இவள்போல் அருள் வந்தவை காட்டி, 20
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல், நீ செல்லும்
கானம் தகைப்ப, செலவு.

4

வலி முன்பின், வல்லென்ற யாக்கைப், புலி நோக்கின்-
சுற்றமை வில்லர், சுரி வளர் பித்தையர்,
அற்றம் பார்த்து அல்கும்-கடுங்கண் மறவர் தாம்
கொள்ளும் பொருள் இலர்ஆயினும், வம்பலர்
துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து, உயிர் வௌவலின், 5
புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆர் இடை,
வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின்,
உள்ளினிர் என்பது அறிந்தனள், என் தோழி;
'காழ் விரி வகை ஆரம் மீ வரும் இள முலை
போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார், என் 10
தாழ் கதுப்பு அணிகுவர், காதலர்; மற்று, அவர்
சூழ்வதை எவன்கொல்? அறியேன்!' என்னும்
'முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரைக்
கள்ளினும் மகிழ்செயும் என உரைத்தும் அமையார், என்
ஒள் இழை திருத்துவர், காதலர்; மற்று, அவர் 15
உள்ளுவது எவன்கொல்? அறியேன்!" என்னும்
'நுண் எழில் மாமைச் சுணங்கு அணி ஆகம் தம்
கண்ணொடு தொடுத்தென நோக்கியும் அமையார், என்
ஒள் நுதல் நீவுவர், காதலர்; மற்று, அவர்
எண்ணுவது எவன்கொல்? அறியேன்!' என்னும்; 20
      எனவாங்கு,
'கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து என!' என் தோழி
அழிவொடு கலங்கிய எவ்வத்தள்; ஒரு நாள், நீர்,
பொழுது இடைப்பட நீப்பின், வாழ்வாளோ?
ஒழிக இனி, பெரும! நின் பொருட் பிணிச் செலவே. 25

5

பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரை
மாஅல் யானையொடு மறவர் மயங்கித்
தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அருஞ் சுரம்
இறந்து, நீர் செய்யும் பொருளினும், யாம் உமக்குச்
சிறந்தனம் ஆதல் அறிந்தனிர்ஆயின், 5
நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின்
ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதைக்,
கேள் பெருந் தகையோடு எவன் பல மொழிகுவம்?
நாளும் கோள் மீன் தகைத்தலும் தகைமே,
கல்லெனக் கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின், 10
புல்லென்ற களம் போலப் புலம்பு கொண்டு, அமைவாளோ?
ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடு போல்,
பாழ்பட்ட முகத்தோடு, பைதல் கொண்டு, அமைவாளோ?
ஓர் இரா வைகலுள், தாமரைப் பொய்கையுள்
நீர் நீத்த மலர் போல, நீ நீப்பின், வாழ்வாளோ? 15
எனவாங்கு,
பொய்ந் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு,
எந் நாளோ, நெடுந் தகாய்! நீ செல்வது,
அந் நாள் கொண்டு இறக்கும், இவள் அரும் பெறல் உயிரே.

6

மரையா மரல் கவர, மாரி வறப்ப-
வரை ஓங்கு அருஞ் சுரத்து ஆர் இடைச் செல்வோர்,
சுரை அம்பு, மூழ்கச் சுருங்கிப், புரையோர் தம்,
உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்குத்-
தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந் துயரம் 5
கண்ணீர் நனைக்கும் கடுமைய, காடு என்றால்,
என், நீர் அறியாதீர் போல இவை கூறல்?
நின் நீர அல்ல, நெடுந் தகாய்! எம்மையும்,
அன்பு அறச் சூழாதே, ஆற்றிடை நும்மொடு
துன்பம் துணையாக நாடின், அது அல்லது 10
இன்பமும் உண்டோ , எமக்கு?

7

வேனில் உழந்த வறிது உயங்கும் ஒய் களிறு
வான் நீங்கு வைப்பின் வழங்காத் தேர் நீர்க்கு அவாஅம்
கானம் கடத்திர், எனக் கேட்பின், யான் ஒன்று
உசாவுகோ-ஐய! சிறிது;-
நீயே, செய் வினை மருங்கில் செலவு, அயர்ந்து, யாழ நின் 5
கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே;
இவட்கே, செய்வு உறு மண்டிலம் மையாப்பது போல்,
மை இல் வாண் முகம் பசப்பு ஊரும்மே;
நீயே, வினை மாண் காழகம் வீங்கக் கட்டி,
புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே; 10
இவட்கே, சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல்,
இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே;
நீயே, புலம்பு இல் உள்ளமொடு பொருள்வயிற் செலீஇய,
வலம் படு திகிரி வாய் நீவுதியே;
இவட்கே, அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல், 15
இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே
என நின்,
செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின்,
தன் நலம் கடைகொளப்படுதலின், மற்று இவள்
இன் உயிர் தருதலும் ஆற்றுமோ- 20
முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே?

8

நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க,
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல, ஞாயிறு
கடுகுபு கதிர் மூட்டிக் காய் சினம் தெறுதலின்,
உறல் ஊறு கமழ் கடாஅத்து ஒல்கிய எழில் வேழம்,
வறன் உழு நாஞ்சில் போல், மருப்பு ஊன்றி நிலம் சேர; 5
விறன் மலை வெம்பிய போக்கு அரு வெஞ் சுரம்
சொல்லாது இறப்பத் துணிந்தனிர்க்கு ஒரு பொருள்
சொல்லுவது உடையேன்; கேண்மின், மற்று ஐஇய!
வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல்
ஏழும் தம் பயன் கெட, இடை நின்ற நரம்பு அறூஉம் 10
யாழினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?
மரீஇத் தாம் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது,
பிரியுங்கால் பிறர் எள்ள, பீடு இன்றிப் புறம் மாறும்
திருவினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?
புரை தவப் பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை 15
வரைவு இன்றிச் செறும் பொழுதில், கண் ஓடாது உயிர் வௌவும்
அரைசினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?
எனவாங்கு;
நச்சல் கூடாது பெரும! இச் செலவு
ஒழிதல் வேண்டுவல், சூழின், பழி இன்று; 20
மன்னவன் புறந்தர, வரு விருந்து ஓம்பி,
தன் நகர் விழையக் கூடின்,
இன் உறல் வியன் மார்ப! அது மனும் பொருளே.

9

எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்,
உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும்,
நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!-
வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை, 5
என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்,
தம்முள்ளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணிரோ? பெரும!'
'காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை;
ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய 10
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்;
பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை, 15
நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்?
தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?
சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! 20
எனவாங்கு,
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே.

10

வறியவன் இளமை போல், வாடிய சினையவாய்,
சிறியவன் செல்வம் போல், சேர்ந்தார்க்கு நிழல் இன்றி,
யார்கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல்,
வேரொடு மரம் வெம்ப, விரி கதிர் தெறுதலின்,
அலவுற்றுக் குடி கூவ, ஆறு இன்றிப் பொருள் வெஃகி, 5
கொலை அஞ்சா வினைவரால், கோல் கோடியவன் நிழல்
உலகு போல், உலறிய உயர் மர வெஞ் சுரம்
இடை கொண்டு பொருள்வயின் இறத்தி நீ எனக் கேட்பின்,
உடைபு நெஞ்சு உக, ஆங்கே ஒளிஓடற்பாள்மன்னோ-
படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ 10
புடைபெயர்வாய்ஆயினும், புலம்பு கொண்டு இனைபவள்?
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ எனக் கேட்பின்,
பனிய கண் படல் ஒல்லா படர் கூர்கிற்பாள்மன்னோ-
நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகையாகத்
துனி செய்து நீடினும், துறப்பு அஞ்சிக் கலுழ்பவள்? 15
பொருள் நோக்கிப் பிரிந்து நீ போகுதி எனக் கேட்பின்,
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்மன்னோ
இருள் நோக்கம் இடையின்றி, ஈரத்தின் இயன்ற நின்
அருள் நோக்கம் அழியினும், அவலம் கொண்டு அழிபவள்?
எனவாங்கு; 20
'வினை வெஃகி நீ செலின், விடும் இவள் உயிர்' எனப்,
புனையிழாய்! நின் நிலை யான் கூறப், பையென,
நிலவு வேல் நெடுந் தகை நீள் இடைச்
செலவு ஒழிந்தனனால்; செறிக, நின் வளையே! 

 
Tag : Kalithokai, Ettuthokai, Tamil Literature, Sanga Ilakkiyangal, Sangam, Tamil Noolgal, Tamil Noolkal
 
[ மேற்புறம் ]
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later