New Register   -  Login     
Tamil Mozhi - Literatures
 - தமிழ்மொழி முகப்பு » இலக்கியங்கள் » இலக்கிய நூல்கள் » பத்துப்பாட்டு »
சேனல்கள்
இணைப்புகள்

சிறுபாணாற்றுப்படை (Sirupanatrupadai)

 

குறிப்பு :

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
 

 
 

நூல்

மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை
யணிமுலைத் துயல்வரூஉ மாரம் போலச்
செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்றுக்
கொல்கரை நறும்பொழிற் குயில்குடைந் துதிர்த்த
புதுப்பூஞ் செம்மல் சூடிப் புடைநெறித்துக்
கதுப்புவிரித் தன்ன காழக நுணங்கற
லயிலுருப் பனைய வாகி யைதுநடந்து
வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப
வேனி னின்ற வெம்பத வழிநாட்
காலைஞா யிற்றுக் கதிர்கடா வுறுப்பப். . . .10

பாலை நின்ற பாலை நெடுவழிச்
சுரன்முதன் மராஅத்த வரிநிழ லசைஇ
யைதுவீ ழிகுபெய லழகுகொண் டருளி
நெய்கனிந் திருளிய கதுப்பிற் கதுப்பென
மணிவயின் கலாபம் பரப்பிப் பலவுடன்
மயின்மயிற் குளிக்குஞ் சாயற் சாஅ
யுயங்குநாய் நாவி னல்லெழி லசைஇ
வயங்கிழை யுலறிய அடியி னடிதொடர்ந்
தீர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கையிற்
சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென. . .20

மால்வரை யொழுகிய வாழை வாழைப்

பூவெனப் பொலிந்த ஓதி ஓதி
நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக்
களிச்சுரும் பரற்றுஞ் சுணங்கிற் சுணங்குபிதிர்ந்
தியாணர்க் கோங்கி னவிர்முகை யெள்ளிப்

பூணகத் தொடுங்கிய வெம்முலை முலையென

வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கி

னின்சே றிகுதரு மெயிற்றி னெயிறெனக்

குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின் மெல்லியல் . . . .30

மடமா னோக்கின் வாணுதல் விறலியர்
நடைமெலிந் தசைஇய நன்மென் சீறடி
கல்லா விளையர் மெல்லத் தைவரப்
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பி

னின்குரற் சீறியா ழிடவயிற் றழீஇ
நைவளம் பழுநிய நயந்தெரி பாலை
கைவல் பாண்மகன் கடனறிந் தியக்க

வியங்கா வையத்து வள்ளியோர் நசைஇத்

துனிகூ ரெவ்வமொடு துயராற்றுப் படுப்ப
முனிவிகந் திருந்த முதுவா யிரவல. . . .40

கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்க்
கழுநீர் மேய்ந்த கயவா யெருமை
பைங்கறி நிவந்த பலவி னீழல்
மஞ்சண் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர

விளையா விளங்க ணாற மெல்குபு பெயராக்

குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளுங்

குடபுலங் காவலர் மருமா னொன்னார்

வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த
எழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவண்
வருபுனல்வாயில் வஞ்சியும் வறிதே யதாஅன்று . . .50

நறவுவா யுறைக்கும் நாகுமுதிர் நுணவத்
தறைவாய்த் குறுந்துணி யயிலுளி பொருத
கைபுனை செப்பங் கடைந்த மார்பிற்
செய்பூங் கண்ணி செவிமுத றிருத்தி
நோன்பகட் டுமண ரொழுகையொடு வந்த

மகாஅ ரன்ன மந்தி மடவோர்
நகாஅ ரன்ன நளிநீர் முத்தம்
வாள்வா யெருந்தின் வயிற்றகத் தடக்கித்
தோள்புற மறைக்கும் நல்கூர் நுசுப்பி
னுளரிய லைம்பா லுமட்டிய ரீன்ற . . . .60

கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடுந்
தத்துநீர் வரைப்பிற் கொற்கைக் கோமான்
தென்புலங் காவலர் மருமா னொன்னார்

மண்மாறு கொண்ட மாலை வெண்குடைக்
கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன்
தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனைமறுகின் மதுரையும் வறிதே யுதாஅன்று
நறுநீர்ப் பொய்கை யடைகரை நிவந்த

துறுநீர்க் கடம்பின் றுணையார் கோதை
ஓவத் தன்ன வுண்டுறை மருங்கிற் . . . .70

கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தலின்
வருமுலை யன்ன வண்முகை யுடைந்து
திருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை

யாசி லங்கை யரக்குத்தோய்ந் தன்ன
சேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை
யேம வின்றுணை தழீஇ யிறகுளர்ந்து
காமரு தும்பி காமரஞ் செப்புந்
தண்பணை தழீஇய தளரா இருக்கைக்
குணபுலங் காவலர் மருமா னொன்னா
ரோங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியுந். . .80

தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பிய
னோடாப் பூட்கை யுறந்தையும் வறிதே யதாஅன்று

வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்
கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய
அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்
பெருங்க னாடன் பேகனுஞ் சுரும்புண
நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரல். . . .90

பறம்பிற் கோமான் பாரியுங் கறங்குமணி

வாலுளைப் புரவியொடு வையக மருள

வீர நன்மொழி யிரவலர்க் கீந்த
வழறிகழ்ந் திமைக்கு மஞ்சுவரு நெடுவேற்
கழறொடித் தடக்கைக் காரியு நிழறிகழ்
நீல நாக நல்கிய கலிங்க
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோ

ளார்வ நன்மொழி யாயு மால்வரைக்
கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி. . . .100

யமிழ்துவிளை தீங்கனி யெளவைக் கீந்த
வுரவுச்சினங் கனலுமொளிதிகழ் நெடுவே

லரவக்கடற் றானை யதிகனுங் கரவாது
நட்டோ ருவப்ப நடைப்பரி கார
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாட னள்ளியு நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகக்துக்
குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த. . . .110

வோரிக் குதிரை யோரியு மெனவாங்
கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோ
ளெழுவர் பூண்ட வீகைச் செந்நுகம்
விரிகடல் வேலி வியலகம் விளங்க
வொருதான் றாங்கிய வுரனுடைய நோன்றா
ணறுவீ நாககு மகிலு மாரமுந்
துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகிய
பொருபுன றரூஉம் போக்கரு மரபிற்
றொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய
நன்மா விலங்கை மன்ன ருள்ளும் . . . .120

மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வா

ளுறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்
களிற்றுத்தழும் பிருந்த கழறயங்கு திருந்தடிப்

பிடிக்கணஞ் சிதறும் பெயல்மழைத் தடக்கைப்

பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை
நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு
தாங்கரு மரபிற் றன்னுந் தந்தை

வான்பொரு நெடுவரை வளனும் பாடி

முன்நாள் சென்றன மாக விந்நா
டிறவாக் கண்ண சாய்செவிக் குருளை. . . .130

கறவாக் பால்முலை கவர்த னோனாது

புனிற்றுநாய் குரைக்கும் புல்லெ னட்டில்
காழ்சோர் முதுசுவர்க் கணச்சித லரித்த
பூழி பூத்த புழற்கா ளாம்பி
யொல்குபசி யுழந்த வொடுங்குநுண் மருங்குல்

வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த

குப்பை வேளை யுப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்
திருக்பே ரொக்கலொ டொருங்குடன் மிசையு
மழிபசி வருத்தம் வீடப் பொழிகவுட் . . . .140

டறுகட் பூட்கைத் தயங்குமணி மருங்கிற்
சிறுகண் யானையொடு பெருந்தே ரெய்தி

யாமவ ணின்றும் வருதும் நீயிரு
மிவணயந் திருந்த விரும்பே ரொக்கற்
செம்ம லூள்ளமொடு செல்குவி ராயி

னலைநீர்த் தாழை யன்னம் பூப்பவுந்
தலைநாட் செருந்தி தமனியம் மருட்டவுங்
கடுஞ்சூன் முண்டகங் கதிர்மணி கழாஅலவும்
நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவும்
கானல் வெண்மணல் கடலுலாய் நிமிர்தரப். . . .150

பாடல் சான்ற நெய்த னெடுவழி

மணிநீர்ப் வைப்பு மதிலொடு பெயரிய

பனிநீர்ப் படுவின் பட்டினம் படரி
னோங்குநிலை யொட்டகந் துயுன்மடிந் தன்ன

வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகிற்
கரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோண்
மதியேக் கறூஉம் மாசறு திருமுகத்து
நுதிவே னோக்கி னுளைமக ளரித்த

பழம்படு தேறல் பரதவர் மடுப்பக்
கிளைமலர்ப் படப்பைக் கிடங்கிற் கோமான். . .160

தளையவிழ் தெரியற் றகையோற் பாடி

யறற்குழற் பாணி தூங்கி யவரொடு

வறற்குழற் சூட்டின் வயின்வயிற் பெறுகுவிர்
பைந்நனை யவரை பவழங் கோப்பவுங்
கருநனைக் காயாக் கணமயி லவிழவுங்
கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவுஞ்
செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவுங்
கொல்லை நெடுவழிக் கோப மூரவு

முல்லை சான்ற முல்லையம் புறவின்
விடர்கா லருவி வியன்மலை மூழ்கிச் .. . .170

சுடர்கான் மாறிய செவ்வி நோக்கித்
திறல்வே னுதியிற் பூத்த கேணி

விறல்வேல் வென்றி வேலூ ரெய்தி
னுறுவெயிற் குலைஇய வுருப்பவிர் குரம்பை
யெயிற்றிய ரட்ட இன்புளி வெஞ்சோறு
தேமா மேனிச் சில்வளை யாயமொ
டாமான் சூட்டி னமைவரப் பெறுகுவிர்
நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக்
குறுங்காற் காஞ்சிக் கொம்ப ரேறி
நிலையருங் குட்ட நோக்கி நெடிதிருந்து. . . .180

புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல்

வள்ளுகிர் கிழித்த வடுவாழ் பாசடை

முள்ளரைத் தாமரை முகிழ்விரி நாட்போது
கொங்குகவர் நீலச் செங்கட் சேவல்

மதிசே ரரவின் மானத் தோன்று

மருதஞ் சான்ற மருதத் தண்பணை

யந்தண ரருகா வருங்கடி வியனக

ரந்தண் கிடங்கினவ னாமூ ரெய்தின்

வலம்பட நடக்கும் வலிபுண ரெருத்தி
னுரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை. . . .190

பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்
தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப

விருங்கா ழுலக்கை யிரும்புமுகந் தேய்த்த
அவைப்புமா ணரிசி யமலைவெண் சோறு
கவைத்தா ளலவன் கலவையொடு பெறுகுவி
ரெரிமறிந் தன்ன நாவி னிலங்கெயிற்றுக்
கருமறிக் காதிற் கவையடிப் பேய்மக
ணிணனுண்டு சிரித்த தோற்றம் போலப்
பிணனுகைத்துச் சிவந்த பேருகிர்ப் பணைத்தா
ளண்ணல் யானை யருவிதுக ளவிப்ப . . . .200

நீறடங்கு தெருவினவன் சாறயர் மூதூர்
சேய்த்து மன்று சிறிதுநணி யதுவே
பொருநர்க் காயினும் புலவர்க் காயினு

மருமறை நாவி னந்தணர்க் காயினுங்
கடவுண் மால்வரை கண்விடுத் தன்ன
அடையா வாயிலவ னருங்கடை குறுகிச்
செய்ந்நன்றி யறிதலுஞ் சிற்றின மின்மையு

மின்முக முடையையு மினிய னாதலுஞ்
செறிந்துவிளங்கு சிறப்பி னறிந்தோ ரேத்த
அஞ்சினர்க் களித்தலும் வெஞ்சின மின்மையு . . .210

மாணணி புகுதலு மழிபடை தாங்கலும்
வாண்மீக் கூற்றத்த்து வயவ ரேத்தக்
கருதியது முடித்தலுங் காமுறப் படுதலு
மொருவழிப் படாமையு மோடிய துணர்தலு

மரியே ருண்க ணரிவைய ரேத்த
அறிவுமடம் படுதலு மறிவுநன் குடைமையும்

வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்

பரிசில் வாழ்க்கைப் பரிசில ரேத்தப்
பன்மீ னடுவட் பான்மதி போல
இன்னகை யாயமோ டிருந்தோற் குறுகிப் . . . .220

பைங்க ணூகம் பாம்புபிடித் தன்ன
வங்கோட்டுச் செறிந்த வவிழ்ந்துவீங்கு திவவின்

மணிநிரைத் தன்ன வனப்பின் வாயமைத்து

வயிறுசேர் பொழுகிய வகையமை யகளத்துக்
கானக் குமிழின் கனிநிறங் கடுப்பப்
புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய்
தமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பிற்

பாடுதுறை முற்றிய பயன்றெரி கேள்விக்

கூடுகொ ளின்னியங் குரல்குர லாக
நூனெறி மரபிற் பண்ணி யானாது. . . .230

முதுவோர்க்கு முகிழ்த்த கையினை யெனவு

மிளையோர்க்கு மலர்ந்த மார்பினை யெனவு
மேரோர்க்கு நிழன்ற கோலினை யெனவுந்
தேரோர்க் கழன்ற வேலினை யெனவு
நீசில மொழியா வளவை மாசில்
காம்புசொலித் தன்ன வறுவை யுடீஇப்
பாம்புவெகுண் டன்ன தேற னல்கிக்
காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப்

பூவிரி கச்சைப் புகழோன் றன்முன்
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட். . . .240

பனுவலின் வழாஅப் பல்வே றடிசில்

வாணிற விசும்பிற் கோண்மீன் சூழ்த்த

விளங்கதிர் ஞாயி றெள்ளூந் தோற்றத்து
விளங்குபொற் கலத்தில் விரும்புவன பேணி

யானா விருப்பிற் றனின் றூட்டித்
திறல்சால் வென்றியொடு தெவ்வுப்புல மகற்றி

விறல்வேன் மன்னர் மன்னெயின் முருக்கி
நயவர் பாணர் புன்கண் டீர்த்தபின்
வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு
பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி .. . .250

யுருவ வான்மதி யூர்கொண் டாங்குக்
கூருளி பொருத வடுவாழ் நோன்குறட்
டாரஞ் சூழ்ந்த வயில்வாய் நேமியொடு
சிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத்
ததர்பிணி யவிழ்ந்த தோற்றம் போல
வுள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வைக்
கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி

யூர்ந்துபெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு

மாசெல வொழிக்கு மதனுடை நோன்றாள்
வாண்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ. . . .260

யன்றே விடுக்குமவன் பரிசின் மென்றேட்

டுகிலணி யல்குற் றுளங்கியன் மகளி

ரகிலுண விரித்த வம்மென் கூந்தலின்

மணிமயிற் கலாப மஞ்சிடைப் பரப்பித்
துணிமழை தவழுந் துயல்கழை நெடுங்கோட்
டெறிந்துரு மிறந்த வேற்றருஞ் சென்னிக்
குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச்
செல்லிசை நிலைஇய பண்பி
நல்லியக் கோடனை நயந்தனிர் செலினே. . . .269



சிறுபாணாற்றுப்படை முற்றிற்று
 

 
Tag : Sirupanatrupadai, Pattupatu, Tamil Literature, Sanga Ilakkiyangal, Sangam, Tamil Noolgal, Tamil Noolkal
 
[ மேற்புறம் ]
தங்களுடைய படைப்புக்கள் தமிழ்மொழி.காம் இல் வெளியிட, படைப்புக்களை யுனிகோடில் டைப் செய்து admin@tamilmozhi.com என்ற முகவரிக்கு அணுப்பிவைக்கவும். படைப்புகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
DownloadWings.com
முகப்பு | எங்களைப் பற்றி | உங்கள் கருத்து | விளம்பரத்திற்கு | தள வரைபடம்
Homepage | About Us | Write to Us | Advertise with us | Site Map
Copyright © 2006-2009 TamilMozhi.com. All rights reserved
Best viewed with Internet Explorer 3.x or Later